பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Thursday, July 26, 2012

சித்தர் கல்வி என்ற சாகாக் கல்வி


சித்தர் கல்வி என்பது நமது உடல், மனம், ஆன்மா இவற்றை சுத்தப்படுத்தி ஒளியாக்கி பேரான்மாவிடம் கலப்பது ஆகும்.

1. இக்கல்வியை கற்றால் இறப்பை தவிர்த்து ஒளி உடல் பெற்று மரணத்தை வெல்லலாம். இதற்கு “வாசியோகம்” செய்து 72,000 நாடி-நரம்புகளை சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்து ஒளி உடல் பெற்றால் அதுதான் “முக்தி” நிலையாகும். அதன் பின் மரணம் கிடையாது. இது தான் சாகாக் கல்வியாகும்.

2. இப்பிறப்பில் சிலர் பல பட்டப்படிப்பு படித்து விடுவார்கள். அவர்கள் இறந்து மீண்டும் அடுத்த பிறவியில் ஆரம்பக்கல்வியிலிருந்து படிக்கவேண்டும். ஆனால் சித்தர் கல்வியை ஒருவர் கற்றுக்கொள்ளும் போது அவர் சூழ்நிலை, உடல்நிலை காரணமாக இறக்க நேர்ந்தால் அவர் அப்பிறவியில் 35,000 நாடி நரம்புகளை சுத்தம் செய்து இருந்தால், அடுத்த பிறவியில் 35,000 நாடி நரம்புகளில் இருந்து தான் தொடங்கும். ஆகவே ஏற்கனேவே போன பிறவியில் கற்ற சித்தர் கல்வி மறுபிறவியிலும் தொடர்கிறது. ஆகையால் இது சாகாக் கல்வியாகும்.

3. ஒருவர் இப்பிறவியில் சித்தர் கல்வியை கற்றுக் கொள்ளும் போது பிராணசக்தியை அதிகப்படுத்தி உடலை சுத்தப்படுத்தும் போது, நம்முடைய தேகம் ஒளிநிலையை அடைந்தால் இறப்பு கிடையாது. ஆகவே இறப்பு இல்லாததால் இது சாகாக் கல்வியாகும்.








சுவாசம் 

சுவாசம் என்றால் காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுவது என்று கூறப்படுகிறது. மூக்கின் இரண்டு துவாரங்களிலும் சுவாசம் நடைபெறுகிறது. வலது நாசி துவாரத்தின் மூலம் நடைபெறும் சுவாசத்தை சூரிய சுவாசம் என்றும், இடது நாசி துவாரத்தின் மூலம் நடைபெறும் சுவாசத்தை சந்திர சுவாசம் என்றும் கூறப்படுகிறது. சுவாசமானது வலது நாசியில் தொண்ணூறு சதவிகிதம் நடைபெறும் போது, இடது நாசியில் பத்து சதவிகிதம் நடைபெறும். அப்போது உடலில் வெப்பத்தன்மை இருக்கும். அதனால் இதனை சூரிய சுவாசம் என்று கூறுவர். இதேபோல் இடது நாசியில் தொண்ணூறு சதவிகிதம் நடைபெறும் போது, வலது நாசியில் சுவாசம் பத்து சதவிகிதம் நடைபெறும். அப்போது உடலில் குளிர்ச்சியான தன்மை, மிதமான வெப்பம் இருக்கும். அதனால் இதனை சந்திர சுவாசம் என்று கூறுவர்

இரண்டு நாசி வழியாகவும் சரிசமமாக நடைபெறும் சுவாசத்தை “சுழிமுனா சுவாசம்” என்று கூறுவர். இந்த சுவாசம் நடைபெறும் போது நமது உடலில் வெப்பம், குளிர்ச்சித்தன்மை இல்லாமல் அதிக வெப்பநிலை இருக்கும். அதனால் இதனை சுழிமுனா சுவாசம் என்று கூறுவர்.

இந்த மூன்று சுவாசங்கள் நமது உடல் முழுவதும் பரவுகிறது. சூரிய சுவாசமானது மூக்கின் வலது நாசி துவாரத்திலிருந்து இடது கால் வரை 16 ஸ்தானங்கள் ஆக 32 ஸ்தானங்கள் ஏறி இறங்குகிறது. அதே போல் சந்திர சுவாசமானது மூக்கின் இடது நாசி துவாரத்திலிருந்து வலது கால் வரை 16 ஸ்தானங்கள் ஆக 32 ஸ்தானங்கள் ஏறி இறங்குகிறது. ஆனால் சுழிமுனா சுவாசமோ மூக்கின் நுனியிலிருந்து கால்வரை உடல் முழுவதும் பரவி செல்கிறது. இவையே நமது உடலில் மூன்று சுவாசங்களின் செயல்பாடாகும்.

பிராணாயாமம்:

உலக வழக்கில் பிராணாயாமம் என்றால் சுவாசத்தை சரிசெய்யக்கூடிய பயிற்சி என்று கருதப்படுகிறது. அதாவது மூன்று சுவாசங்களையும் சரிவர (ஒரே அளவாக) ஓடச்செய்வது தான் பிராணாயாமம் என்று கருதப்படுகிறது.

மேலும் இதன் மூலம் உடலுக்கு, காற்றிலிருந்து கிடைக்கக்கூடிய பிராண சக்தியின் அளவு அதிகமாக கிடைப்பதாக கருதப்படுகிறது. இது உண்மையில் பிராணாயாமம் என்று சொல்வதைவிட சீரான சுவாசப்பயிற்சி என்று மக்களால் கருதப்படுகிறது. அதனால் தான் மக்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், யோகசனம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். ஏனென்றால் இவையனைத்தும் சுவாசத்தை சீராக வைத்துக்கொண்டு, தேகம் சீராக இயங்க உதவுகிறது

ஆனால் உண்மையில், பிராணயாமம் என்பது சுவாசத்தை மட்டும் சீராக வைத்திருக்க உதவும் ஒரு விஷயமாக இல்லாமல், சுவாசக்கலைகள், தேகம், மனம், உயிர், ஆன்மா போன்ற அனைத்தையும் சரிவர இயங்க உதவிப்புரியும் ஒரு பயிற்சியாக இருக்கிறது. ஆனால் காமம், கோபம், குரோதம், பொறாமை போன்ற அவஸ்தைகள் மூலம் சுவாசம் கட்டுப்படாமல் போகிறது. அதனால் நாம் உயிராற்றலை இழக்கிறோம்.

பிராணாயாம பயிற்சி என்றால் நமது உடலில் சூரியன், சந்திரன், சுழிமுனா என்ற மூன்று சுவாசங்கள் நடைபெறுகிறது. இந்த சுவாசங்களை ஒரே கலையாக்கி பிராணாயாம பயிற்சி செய்யும்போது அங்கு உயிராற்றல் அந்த சுவாசத்தோடு கலந்து உடல் முழுவதும் சென்று எல்லா நாடி நரம்புகளையும், உறுப்புகளையும் பலப்படுத்திகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் பேணப்படுகிறது. இப்பயிற்சியில் மட்டும் தான் மற்ற பிராணாயாம பயிற்சியைவிட உயிராற்றல் அதிகமாக உற்பத்தியாகிறது.

அதனால் மனதால், காமம், கோபம் குரோதம், பொறாமை போன்ற உணர்வுகளை கட்டுப்பாடாக வைத்திருக்க உதவுகிறது. அதனால் இந்த உணர்வுகளின் மூலம் உயிராற்றல் செலவாகாமல் இருக்கிறது. ஆகையால் சுவாசத்தில், உயிராற்றலை கலக்கக்கூடிய பயிற்சிதான் பிராணாயாமம் என்பதாகும். இந்த பயிற்சியை சித்தர்கள் செய்து வந்தனர். சித்தர்கள் பரிபாஷையில் இந்த பயிற்சிக்கு "வாசி" என்று பெயர். அதனால் தான் இந்த பிராணாயாம பயிற்சியை நாங்கள் "வாசி" என்றே அழைக்கிறோம்.

தியானம்

தியானம் என்றால் மனதை ஒருநிலை படுத்துவதாகும். சரி மனதை எதில் ஒருநிலை படுத்துவது?

காற்றுக்கு ஒப்பிட்டு மனதை நமது சித்தர்கள் கூறி இருக்கிறார்கள். பஞ்ச பூதத்தில் காற்று மனமாக சித்திரிக்கப்பட்டு இருக்கிறது. ஆகையால் காற்று வடிவமான மனம் அலைபாய்கிறது. அப்போது அதை நிறுத்தினால், நிதானமாக சிந்திக்கக்கூடிய ஆற்றல் கிடைக்கும்.

மனதை எதில் நிலைபெறச் செய்யவேண்டும்?


மனதை உடலில் ஓர் இடத்தில் நிற்க வைத்தால் அங்கு வெப்பம் உண்டாகும். அப்போது அங்கு உயிராற்றல் வந்து அதனுடன் கூடி, மனம் ஒரு திட நிலை பொருள் போல உருவாகி, மணிப்போன்று உருவாகி, நமதுஉடலில் உள்ள அனைத்து உணர்வுகளும், எண்ணங்களும் அதில் சேர்ந்து அந்த மணியை, அதாவது மனதை உணர ஆரம்பிக்கும். அது ஒரு மணியை போல விளங்கும். இதை உருவாக்கும் நிலைக்குத்தான் தியானம் என்று பெயர்.

அப்போது மனதில் எண்ணங்கள் பல இல்லாமல், ஒரே எண்ணம் அந்த உணர்வில் மட்டும் தான் இருக்கும். இந்த தியானப் பயிற்சி தான் எந்த ஒரு விஷயத்தில் மனத்தை செலுத்தினாலும், மனம் அதில் ஒன்று பட்டு, நிலைத்துநின்று, அந்த விஷயத்தில் தெளிவான முடிவை எடுக்க உதவும். மேலும் நமக்கு வரும் துன்பங்களை எதிர்கொண்டு வெற்றி அடைய முடியும். இதுதான் தியானத்தின் பலன் ஆகும்.

மனதை உயிராற்றலில் ஒன்றுப்படுத்துதல் தியானம் ஆகும். தியானத்தின் பலன் ஆறாவது அறிவை, ( மணி உருவாக்குவதை ) அறிவது ஆகும்.

மணியை உற்பத்தி செய்பவன் மனிதன் ஆகிறான்.

மனம்:

மனம் என்றால் பஞ்ச பூத அம்சங்களில் ஒன்றான காற்று ஆகும். காற்றானது இந்த பூமியை எப்படி சுற்றி ஒரு கவசம் போல் இருக்கிறதோ, அதுபோல நமது மனமும் நமது எல்லா உணர்வுகளையும், உடலையும் சூழ்ந்துள்ளது. ஆகவே எல்லா விதமான உணர்வுகளும், செயலும் ஐம்புலன்களும் மனதின் வழியே செயல்படுகிறது. இந்த மனம்தான் பார்க்கிறது, கேட்கிறது, ரசிக்கிறது, உணர்கிறது, சுவைக்கிறது, நுகர்கிறது. இப்படி செயல்படுகிற மனம் ஒவ்வொரு பிறவியிலும் ஓர் அனுபவத்தை பெறுகிறது.


· ஓர் அறிவாய் இருக்கின்றபோது உணர்வை பெறுகிறது.

· ஈரறிவாய் இருக்கின்றபோது உணர்கிறது மற்றும் நுகர்கிறது.

· 3 - வது அறிவாய் இருக்கின்றபோது உணர்வு, நுகர்வு மற்றும் கேட்கிறது.

· 4 - வது அறிவாய் இருக்கின்றபோது உணர்வு, நுகர்வு, கேட்பது மற்றும் பார்க்கிறது.

· 5 - வது அறிவாய் இருக்கின்றபோது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது மற்றும் சுவைப்பது,

· 6 - வது அறிவாய் இருக்கின்றபோது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது, சுவைப்பது மற்றும் சிந்திப்பது.

இப்படி ஒவ்வொரு அறிவிலும் ஒவ்வொரு அனுபவத்தைப் பெற்று, மனித பிறவியில் ஆறு அறிவை பெறுகிறது. ஆறாவது அறிவாகிய சிந்தித்தல் என்றால் மனதை ஒருநிலைப் படுத்தி, அதனுடைய சக்தியை உணர்வது. இதுதான் ஆறாவது அறிவு. இந்த அறிவை முழுமையாக பெறுவதற்கு பிராணாயாமம், தியானம் செய்ய வேண்டும். இவற்றிற்கெல்லாம் காரணம் மனம்.

ஆகவே இந்நிலையை பெறாத மற்ற மனிதர்கள் மிருகங்கள் போல் சாப்பிடுவது, உறங்குவது என சிந்தித்தலைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர். இப்படி ஏன் என்றால், இந்த மனதின் பயணம் ஓர் அணுமுதல் புலன்களின் இச்சை வழியே நடந்து வந்ததால் மனிதன் ஆன பிறகும் அந்நிலையில் இருந்து விலகாமல், அதே நிலை தொடர்கிறது. ஆகவே மனித வாழ்க்கையில் அவனது மனம், காமம், குரோதம், லோபம், மதம், மாச்சரியம், டம்பம், பொறாமை, மோகம் ஆகிய இந்த எட்டு அவஸ்தைகளும், ஐம்புலன்களும் சேர்ந்து மனத்தை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது.

ஆகவே மனதை இதனிடம் இருந்து பிரித்து எடுப்பது தான் ஆறவாது அறிவின் செயலாகும். மனிதன் இதை பயன்படுத்தாத வரைக்கும் மிருகத் தன்மையோடுதான் வாழ்ந்து வருகிறான். ஆகவே இந்த உணர்வுகளை மனம் மற்றவரிடம் செயல் படுத்தி பார்த்து இன்பம் அடைகிறது. இதனால் மனிதன் தன்னுடைய நிலையில் இருந்து உயர்வதற்கு வழி, புலன்களையும், மனதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும். அப்போது மனத்தின் சக்தியையும், இறையாற்றலையும் உணர்ந்து தன்னுடைய நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். இதுதான் மனதின் செயல் ஆகும்.

குறிப்பு: மனிதனுக்கு காமத்தின் மீது மட்டும் ஏன் அதீத ஈடுபாடு என்றால், எல்லா பிறவிகளிலும் இனப்பெருக்கத்திற்காக அதிக அளவில் செயல்படும் உணர்வு காமம் தான். ஆகவே தான் மனிதப்பிறவியில் அதே நிலையில் இருப்பதால்தான் இறைத்தன்மையை அறியமுடியாமல் தவிக்கிறது.

மனதின் செயல் - மகிழ்ச்சி
அனைத்து மக்களும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க விரும்புகின்றனர். ஆனால் அந்த சந்தோஷம் உலக பொருட்களில் இருப்பதாகவே எண்ணுகின்றனர். ஆனால் அந்த ஒரு பொருளானது, அந்த சந்தோஷத்தை சில நிமிடங்கள், சில மணி நேரம், சில நாட்கள் அல்லது சில ஆண்டுகள் என இந்த வரையறைக்குள் தான் அது சந்தோஷத்தைக் கொடுக்க முடியும். ஆனால் உலகம் இப்படி பல பொருட்களை தன்னிடத்தே வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருப்பதாக எண்ணிக்கொண்டு, போட்டியும், பொறாமையும், துன்பங்களையும், தீய எண்ணங்களையும் உண்டாக்கி இன்பமாக இருப்பதாக எண்ணிக்கொண்டு மரணத்தை நோக்கி தன்னுடைய பயணத்தை தொடர்கிறது.

இந்த உலக வாழ்க்கையில் ஒரு வீடு வாங்குவதும், ஒரு கார் வாங்குவதும் தான் நமக்கு தகுதி என்று எண்ணிக்கொண்டு படித்தவர்களும், படிக்காதவர்களும் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் செயல் ஒரு மனிதனுக்கு உள்ள தகுதியை நிர்ணயிக்காது. ஆனால் போட்டியும், பொறாமையும், தீய எண்ணங்களுடனும் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் போட்டியும், பொறாமையும், தீய எண்ணங்களும் இல்லாமல், இந்த உலக பொருட்களை வைத்துக்கொண்டு மிக மிக இன்பமாக வாழ நமக்கு ஓர் தகுதியான நிலையை நாம் நமக்கு ஏற்படுத்த வேண்டும். இந்த தகுதி எதுவென்றால் பிற பொருட்களின் மூலம் வரக்கூடிய எண்ணங்களை அலசி ஆராயக்கூடிய மனப்பக்குவம் தேவை.

இந்த மனப்பக்குவதிற்கு மருந்து எது என்றால் மனத்தை ஒருநிலைப் படுத்துவது. மருந்து என்று ஏன் கூறினேன் என்றால், பொதுவாகவே மருந்து என்றால் சிறிது கசப்புத் தன்மை உடையது தான். ஆனால் அது தான் நோயைத் தீர்க்கும். அது போல் உங்கள் மனமானது உலக விஷயங்களில் இருந்து மனதை பக்குவப்படுத்திக் கொள்வதினால் தான் , மனமானது ஒரு பொருளிலிருந்து ஏற்படக் கூடிய எண்ணங்களை அலசி ஆராய்ந்து, (அதாவது) அந்த பொருளினால் ஏற்படக்கூடிய இன்பங்கள், துன்பங்கள், போட்டிகள், பொறாமைகள் போன்ற நிலைகளை ஆராய்ந்து முடிவெடுக்கும். அப்போது தான் நமக்குள் இருக்கூடிய சந்தோஷமான சூழ்நிலை உருவாகும்.

அதாவது எப்படி என்றால் கோபம், பொறாமை, தீய எண்ணங்கள், துன்பம் இவற்றில் சந்தோஷத்தை கலப்பது. இந்த குணங்கள் இருந்தாலும் சந்தோஷமான மனநிலை ஏற்படும். போட்டியும், பொறாமையும் மனதில் இருந்தாலும் அதை உடனே நீக்குவதற்கு இந்த சந்தோஷம் உதவும். எந்த சந்தோஷம் என்றால் மனதை ஒருநிலைப் படுத்துவதால் ஏற்படக்கூடிய சந்தோஷம், (ஆனந்தம்). இந்நிலையில் இருந்தால் உலக வாழ்க்கையில் வெற்றி பெறலாம். ஞான வாழ்க்கையை அடையலாம்

மணி

மணி என்பது யோகம் பயில்பவர்களுக்கு ஒரு முக்கியமான தகுதியை கொடுக்கக்கூடிய நிலையாகும்.

மணி என்றால் என்ன?

மணி என்றால் ஒரு திடநிலையில் உள்ள ஒரு பொருள் என்று நாம் அறிவோம். அதுபோல் நாம், நம்முடைய மனதை ஓர் இடத்தில் நிலைபெற செய்யும் போது அந்த இடத்தில் மனம், காற்றின் வடிவாமாக இருக்கிறது. அப்போது அங்கு உயிராற்றல், மனம் நிற்கும் இடத்தில் வந்து சேர்கிறது. அந்த நிலையை, அந்த உயிரற்றலை நம்மால் உணர முடியும். அப்பொழுது அந்த இடத்தில், மனம் ஒரு உருண்டையான வடிவத்தை உணர்கிறது. அதற்கு பெயர் தான் மணியாகும்.

இது எப்படி உருவாகுகிறது என்று பார்ப்போம். முதலில் மனதை ஒரு இடத்தில் நிறுத்தும் போது எண்ணங்கள் கட்டுப் படுகிறது. அப்பொழுது ஒரே ஒரு எண்ணம் மட்டும் தான் இருக்கும், அது என்னவென்றால், மனதை ஒரு இடத்தில் நிறுத்துகிறோம் என்ற எண்ணம் தான் இருக்கும். நமது மூக்கின் வழியாக ஓடக்கூடிய சுவாசம் ஆனது மெதுவாக உடலுக்குள்ளே ஓட ஆரம்பிக்கும். அப்பொழுது உயிராற்றல் அந்த இடத்தில் சுவாசத்துடன் கலக்கும், உடல் சிறிது வெப்பம் அடையும். அடுத்ததாக நம் உடலை இயக்கக்கூடிய தசவாயூக்களும் (10 வித வாயூக்களும்) மெதுவாக வெப்பம் அடைந்து அந்த வாயுக்களும் உயிராற்றலை பெற்று அனைத்து ஆங்ஞா சக்கரமும் இயங்கி கொண்டிருப்பதால், மனம் ஒளிநிலையை அடைகிறது, அப்பொழுது அவஸ்தைகள் குறைவதால் எண்ணங்கள் கட்டுப்படுகிறது. அதனால் நாம் எந்த விஷயத்திலும் விருப்பு-வெறுப்பு இன்றி நிதானமாக செயல்பட முடிகிறது. இதன் மூலம் நம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளில் வெற்றிக்கொண்டு அமைதியாக வாழ முடிகிறது.

ஆகவே மணி உற்பத்தி ஆவதன் மூலம் வாழ்க்கையை அமைதியாக நடத்துவது தான் இறைநிலையை அடைய முதல் படியாகும்.

உயிர்

பஞ்ச பூதங்களின் கூட்டு தான் உயிராகும். நீர், நெருப்பு, காற்று, பூமி, ஆகாயம் இந்த கூட்டுக் கலவையில் உள்ள அணுக்கள் ஒன்று சேர்ந்து ஓர் உயிராக உருவாகிறது. இது எப்படி என்றால், ஓர் விதையை மண்ணில் போட்டு தண்ணீர் ஊற்றி அது வளர்கிறது. அது வளர்வதற்க்கு தேவையான பொருட்களாக மண், நிலம், நீர், காற்று, வெப்பம், சூரிய ஒளி, சந்திர ஒளி அவை சேர்ந்ததே திறந்த வெளியான ஆகாயமாகும்.

இதில் ஒரு உயிர் உற்பத்தியாவதற்கு பஞ்ச பூத சக்தி எப்படி உதவுகிறது என்று நமக்கு தெரிகிறது. பல உயிரினங்களாக இந்த பஞ்ச பூத சக்தி உருவெடுத்து, கடைசியில் மனித ரூபம் எடுக்கிறது. அப்போது பஞ்ச பூத சக்தியின் நிலை என்ன என்றால் காற்றானது மனமாகவும், தண்ணீரானது உயிராகவும், நெருப்பானது உடல் இயங்கும் சக்தியாகவும், மண் என்பது உடலாகவும், ஆகாயம் என்பது ஆத்மாவாகவும் இருக்கும் இடமாக விளங்குகிறது. இதுதான் மனித ரூபம். இது அனைத்தும் சேர்ந்து ஓர் மனித உயிராக உருவெடுக்கிறது

No comments: