பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Saturday, July 21, 2012

சரணாகதி



              ஒரு கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து பார்த்தால் தண்ணீர் இடைவெளி இல்லாமல் இருக்கும். ஒரு தண்ணீரால் செய்யப்பட்ட பனிக்கட்டியை தண்ணீரில் போட்டால் அதன் எடைக்கு ஏற்ப தண்ணீரில் முழ்கி இருக்கும்.  இப்போது தண்ணீருக்கும் பனிக்கட்டிகும் இடைவெளி இருக்கும். தண்ணீரில் செய்த ஒரு பொருளாக இருந்தாலும் பனிக்கட்டி ஒரு உருவத்தில் இருக்கும் வரை தண்ணீரில் இருந்து பிரிந்தே இருக்கும். பாத்திரத்தை அசைத்தால் பனிக்கட்டி தனியாக ஆடும் தண்ணீர் தனியாக ஆடும்.  ஆனால் பனிக்கட்டி உருகி தண்ணீராய் மாறிய பிறகு அங்கே பனிக்கட்டி தண்ணீர் என்ற இடைவெளி பாகுபாடு மறைந்துவிடும். இப்போது பாத்திரம் ஆடினால் தண்ணீர் முழுவதும் ஒன்றாய் ஆடும். இப்போது பனிக்கட்டி உருகிவிட்டதால் அதன் உருவத்தை இழந்துவிட்டதால் பாத்திரத்தில் தண்ணீர் எப்படி ஆடுகிறதோ அதே திசையில் ஆடும்.

        
அதுபோல் இயற்கையால் செய்யப்பட்ட பொருள்கள் எல்லாம் உருவம் இருக்கும் வரை தனி தனியே தான் ஆடி கொண்டிருக்கும். உருவம் அற்ற சூழ்நிலையில் எல்லாம் இயற்கை அசைவது போல் மட்டுமே ஆசையும் அந்த அசைவு ஒரே திசையிலேயே அமையும். உருவம் இருக்கும் வரை அசைவு மாறும்.  உருவத்தை கொடுப்பது நான் என்கின்ற எண்ணமே. நான் என்கின்ற எண்ணம் வந்துவிட்டால் நீ என்ற எண்ணம் வந்துவிடும். நீ என்ற எண்ணம் வந்துவிட்டால் பலவாக உருவங்கள் பிரிந்து இந்த உலகத்தை காட்டிக்கொண்டே இருக்கும்.
நான் என்ற உருவம் மறையவேண்டுமானால் நான் என்ற எண்ணம் மறைய வேண்டும். நான் என்ற எண்ணம் மறைந்து விட்டால் நீ என்ற எண்ணம் மறைந்து விடும் அப்போது உலகம் மறைந்து விடும். உலகத்தை மறந்தால் நான் என்பதும் மறைந்துவிடும். உலகத்தில் உள்ள பொருட்களின் உருவத்தை மறந்து எல்லாவற்றையும் இயற்கையாக பார்க்க வேண்டுமானால் இந்த உலகத்தின் மேல் உள்ள ஆசை போகவேண்டும் அது இல்லாவிட்டால் இறைவனை அடையமுடியாது.

        
உலக பற்று நீங்காதவரை இறைவனை அடையமுடியாது. உலக பற்று எப்படி நீங்கும்.  அந்த பற்றை கொடுத்தவனால் மட்டுமே நீக்கமுடியும். அந்த பற்றை கொடுக்கும் மாயை என்ற இறைவனை தொழுது நிற்க வேண்டும். அவனே நான் என்ற எண்ணத்தை கொடுக்கின்றான். அவனே நான் என்ற எண்ணத்துக்குள் இருக்கின்றான். நான் என்ற எனக்குள் இருக்கும் இறைவனை, குருவை, மாயையை வணங்கி வழிபட்டால் அவனே வந்து ஆட்கொண்டு வழி நடத்துவான். அவன் வழிநடத்துதலின் பேரில் நாம் நடந்தால் அவனே நம்மை அவனுக்குள் ஐக்கியமாகி கொள்வான்.

      
எப்படி ஒரு பாறை என்ற உருவப்பொருள்   . ஒரே மூல பொருளால் செய்யபட்டதோ , அதுபோல் இயற்கையில் உள்ள பொருள்கள் எல்லாம் ஒரே பொருளால் செய்யப்பட்டதாகும்.  பாறைக்குள் எப்படி எந்த அசைவும் இருக்காதோ அதேபோல் இயற்கைக்குள் எந்த அசைவும் இல்லை என்பது தான் உண்மை.
அப்படியென்றால் உலகம் தெரிகிறதே அசைவுகள் தெரிகிறதே என்றால் அது அப்படியாக தெரிவது மாயையே. இந்த உண்மை தெரிவிக்க இறைவன் வந்து காட்டினால் தான் புரியும். அதுவரை புரியாது.

     
சுவாசம் என்ற உணர்வு தான் நம்மையும் இந்த உலகத்தையும் வேறுபடுத்தி காட்டுகிறது . சுவாசம் என்பதே மாயையாகும்.  உண்மை தெரியும் போது சுவாசம் நின்றுவிடும்.  சுவாசம் நின்றால் எல்லோரும் இறந்துவிடுவோம் என்பது உலகத்தின் உண்மையாகும்.  ஆனால் சுவாசம் நின்றால் தான் நான் என்ற எண்ணம் மறைந்து இறைநிலையோடு ஒன்றும் நிலை ஏற்படும் என்பது ஆன்மீக உண்மையாகும் .  போக்கும் வரவும் உள்ள சுவாசத்தை கட்டுதல் இறைநிலையே செய்துதரும்.  வெளிசுவாசம் உள்சுவாசமாக மாறும் பின்பு அதுவும் முழுமையாக நின்றுவிடும்.  இவைஎல்லாம் குருவருள் கிடைத்தால் தான் நிறைவேறும் அதனால் நம்மில் இருக்கும் குருவை முழுமையாக நம்பி நம்முடைய பிறவியை சமர்ப்பித்து சரண் அடையவேண்டும்.  சரணடந்தவருகே சித்தி கிடைக்கும். இது சத்யம்.

No comments: