பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Saturday, July 28, 2012

சும்மா இருக்கும் சுகம்

ஆன்மா தான் ஆனந்தம் , திருப்தி, முழுமை பெற்ற அறிவு என்று அறியாமையால் வெளியில் ஆனந்தத்தை,திருப்தியை, முழுமை அறிவை என்று வெளியே தேடியலைகின்றது. அதனால் பல தடவை பல பிறவி எடுக்கிறது. அதனால் மாயையாக பல துன்பங்களை அனுபவிக்கிறது. பின்னர் தியானத்தில் தன்னுள்ளே சென்று தேடிக் கொண்டிருந்தது. முடிவு கிடைக்க வில்லை. தனக்குள் தன்னை தவிர யாரும் இல்லை என்று புரிந்து கொண்டது. தனக்குள் தன்னை தவிர வேறு யாரும் இல்லை என்று தெரிந்த பிறகு அங்கே தன்னை தேடும் முயற்சி, அதாவது ஆனந்தம்,திருப்தி,முழுமை அறிவு என்பதை தேடும் முயற்சியை நிறுத்தி விடுகிறது.

இறைவனை தேடுதல், ஆராய்ச்சி போன்றவை இல்லாமல் இருக்க வேண்டும், அதாவது தேடுதல் என்ற எண்ணம் இல்லா (நிர் குணம்) நிலையில் இருந்தால் தான் ஆனந்தம் , திருப்தி,முழுமை அறிவு என்ற தெளிவு ஏற்படும். அதனால் எண்ணம் அற்ற நிலையில் இரவு பகல் ஏது? உள்ளே வெளியே ஏது ? மனிதன் மிருகம் ஏது ? மேலே கீழே ஏது ? சத்தம் அமைதி ஏது ? இன்பம் துன்பம் ஏது? இந்த இடமே சும்மா இருக்கும் சுகமாகும். தான் தானாய் நின்ற இடம் ஆகும்.




தன்னிலே இருந்த ஒன்றை நான் அறிந்ததிலையே
தன்னிலே இருந்த ஒன்றை நான் அறிந்தபின்
தன்னிலே நான் இருந்து ஓம்புகின்றேனே ..... சிவவாக்கியர்



நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை
நினைக்கிலேன் மறக்கிலேன் ...... சிவவாக்கியர்.



நினைக்கவும் இல்லை , மறக்கவும் இல்லை என்ற எண்ணமற்ற நிலையில் இருந்தால் சும்மா இருக்கும் சுகத்தை பெறலாம்.


எம்முள் உயிர் உயிருள் யாம் ..... வள்ளலார் .

உனக்குள் நான் எனக்குள் நீ ..... சிவவாக்கியர் .

இந்த உயிர் என்பது இந்த பிரபஞ்சமாக இருக்கிறது. நான் இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறேன் எனக்குள் உயிர் பிரபஞ்சமாக இருக்கிறது. இப்போது நாம் பிரபஞ்சத்தின் (ஆன்மா) ஒவ்வொரு செயலுக்கும் பத்து குணகேடுகளாகிய கோபம், காமம்,மதம் மாச்சரியம்,வஞ்சனை,எதிர்பார்ப்பு ....... போல் பத்து உணர்வுகளை காட்டி முரண்பட்டு வாழ்ந்து கொண்டுள்ளோம். வெளிப்புற நிகழுவுகளுக்கு நாம் ஒவ்வொரு நிமிடமும் எதை வெளிபடுதுகிறோம் என்று சிந்தித்தால் பத்து குணங்களின் வெளிபாடே ஆகும். எதையாவது இழந்துவிட்டால் வருத்தம், சம்பவங்களை நினைத்து பயம், கிடைக்காததால் ஏமாற்றம், கோபம், போன்ற பத்து குணங்களை தான் வெளிப்படுத்துகிறோம். 

இந்த பத்து குணங்கள் நம்முள்ளே இருக்கும் வரை நம்மால் நிம்மதியாக இருக்கமுடியாது. இந்த பத்து குணங்களை வெளியேற்றி விட்டால் நம்முள் இருக்கும் ஆனந்தத்தை உணரலாம் . அதனால் நாம் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் எழும் குணங்களை அராய்ந்து வெளியேற்றிவிட்டால் ஆனந்தத்தில் திளைக்கலாம். ஆனந்தம் அதிகரிக்க அதிகரிக்க சூழ்நிலைகள் மாற்றி அமையும் . பசி,பிணி,மூப்பு மறையும் . மரணமில்லா வாழ்வை நோக்கி படையெடுப்போம். அன்பு செய்தால் இந்த பத்து குணங்கள் மறையும், நிர்மலகுணம், ஆராய்ச்சி இல்லா குணம் கொண்டு இருந்தால் ஆனந்தம் அமைதியில் திளைத்து , மூழ்கி, ஆனந்தமாகவே ஆகலாம்.

ஒரு எலிக்கு அன்பு செய்ய நினைத்து பூனையிடம் இருந்து காப்பாற்றினால் பூனைக்கு கேடு செய்தது போல் ஆகிவிடுமே. அப்படி என்றால் எல்லாரிடமும் அன்பு செய்வது எப்படி?. இது எலி இது பூனை என்ற உருவ பேதத்தை மறந்து எல்லாமே இறைவன் என்று அன்பு செய்தால் அங்கே நான் மற்றும் இறைவன் என்ற இரண்டு மட்டுமே இருக்கும். அந்த நிலையில் அன்பு செய்தால் நாமும் இறைவனும் ஒன்றாவோம். அந்த அன்பு நிலையில் பத்து குணங்களும் மறைந்து போகும். அராய்ச்சி இல்லா நிலை உண்டாகும். நான் என்பது மறைந்து போகும். ஆனந்த நிலை உருவாகும் . இதுவே சும்மா இருக்கும் நிலை.


அன்பும் சிவமும் இரண்டு என்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது அறிந்த பின்னர்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே ........


”என் செயலால் ஆவது ஒன்றும் இல்லை எல்லாம் நின் செயலாலே” 

என்று நிர்மலத்தில் (சும்மா இருந்தால்) இருந்தால் சகஜ மார்கத்தாலே இறைநிலையை அடையலாம் .

இந்த முரண்பாட்டை நீக்கி நான் நிர்குணமாக எனக்குள்ளே சும்மா இருந்தால் இந்த உயிரும் உடலும் இணைந்து சிவசக்தி மயமாகி விடும். இதுவே இயற்கையோடு இணக்கமாக வாழ்தல் ஆகும்.

No comments: