பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Sunday, July 29, 2012

நாம் எங்கே போகிறோம்?

மனிதன் ஜனனத்தில் தொடங்கி மரணம் வரைக்கும் அவனது முயற்சிகள்அனைத்தும் என்ன முடிவை தரப்போகிறது?, எந்த ஒரு செயலுக்கும் முடிவில் விடை கிடைப்பது போல, அதாவது படித்தால் பரிட்சையின் முடிவில் வெற்றி அல்லது தோல்வி  என்ற விடை கிடைப்பது போல மனித வாழ்க்கையின் முடிவில் (மரணத்திற்க்கு பிறகு) நமக்கு கிடைப்பது

வெற்றியா ?அல்லது  தோல்வியா? சிந்தியுங்கள்!
     
 இதுவரை நாம் வாழ்ந்த வாழ்க்கையில் பிறந்தது முதல் வளர்ந்து விளையாடி கல்வி கற்று கல்வியின் முடிவில் வேலையை பிடித்து சம்பாதித்து பணம் சேர்த்து, அந்த பணத்தினால் வீடு வாங்கி, கார் வாங்கி, மனைவியை தேடி, குழந்தையை பெற்று அவர்களையும் நம்மைப்போலவே ஆளாக்கி விளையாடி, படிக்கவைத்து வேலைத்தேடி, வேலையைப்பிடித்து  அவனது திறமைக்கேற்ப பணம் சம்பாதித்து அந்த பணத்தினால் மிகப்பெரிய பங்களா வாங்கி புதியதாய் வந்துள்ள ஆடம்பர கார் வாங்கி அவனுக்கு அல்லது அவளுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களும் குழந்தை பெற்று அவர்களையும் நம்மைப்போல ஆளாக்கி விளையாடி படிக்க வைத்து சம்பாதித்து? இப்படியே போய் இறுதியில் என்ன? ............................. இதை படிப்பதற்க்கே சலிப்படையும்  நம் மனம் இப்பிறப்பின் நோக்கத்தை அறியாமல் வாழும் வாழ்க்கையை அனுபவிக்கத்தெறியாமல், தான் தன் குடும்பம் என்ற சுய நலம் கொண்டு எதிர்கால நோக்கம் ஏதுமின்றி வெந்ததை தின்று வந்தது நோய் என்று சாகின்ற பெரும்பாலான மக்களிடையே நம்மை உணராமல் நாம் எங்கே போகிறோம்?
      
 நாம் பிறந்தது பிள்ளைகளை பெறுவதும், சந்ததியை வளர்த்து சொத்துக்களைச்சேர்த்து சுய நலத்துடன் வாழவதற்க்காகவா? மனிதனை போன்றே மிருகங்களும், பறவைகளும், மற்ற ஜீவராசிகளும் வாரிசுகளுடன் பல்கிப்பெருகி வருகின்றன. அனால் அறறிவு  படைத்த நாம் பிறப்பின் நோக்கத்தை சிந்தித்து பார்க்கவேண்டும், நாம் செல்லும் வாழ்க்கை பாதை சரியானதுதானா? என பரிசோதிக்கவேண்டும். நம் ஒவ்வொருவருடைய செயலும் ஆசையின் விளைவே என்பதனை அறிந்து, மனம் என்னும் குரங்கை மடக்கி நியாயமான ஆசையை மட்டுமே பயன்படுத்தி பேராசை தவிர்த்து பிறவிப்பெருங்கடலை கடக்கும் வழி தெறிந்து வாழ வேண்டும்.
      
ஆசை! ஆம் இந்த ஆசையினால் நமது வாழ்க்கையை தொலைக்க, பாதைகளில் செல்லும் போது எவ்வளவு வேகமாக செல்ல முடியுமோ, அவ்வளவு வேகத்தில் சிக்னலில் கூட நிற்க பொறுமையின்றி ஒரு நிமிடத்தை (அதாவது 60 வினாடிகளை) 60 மணி நேரம் போல காத்திருக்க விரும்பாமல் விரைவாக சென்று விபத்திற்க்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண், காது, கை, கால்கள் போன்ற உடல் உறுப்புகளை இழந்து தவிப்பவர்களுடனும், விரைவாக போகவேண்டும் என, மிக விரைவாக வாழ்வை முடித்துக்கொண்டவர்களுடனும் நாம் எங்கே போகிறோம்?
      
பக்கத்து வீட்டுக்காரர் வாழும் வாழ்க்கையை பார்த்து அவரை விட ஒரு படி மேலே வாழ ஆசைப்பட்டு தவறான வழியில் விரைவாக அதிக பணம் சம்பாதித்து தனதுவாழ்க்கையை தொலைத்து சிறையில் கழித்துக்கொண்டிருப்பவர்கள் வரிசையில் நாம் எங்கே போகிறோம்?
     
தான் உழைக்காமல் மற்றவர்களின் உழைப்பை பயன் படுத்தி பணம் சேர்க்கும் புதிய முறை வெளிநாடு வாழ் வல்லுனர்களின் கண்டுபிடிப்பாக  நெட்வொர்க் மார்க்கட்டிங் அல்லது மல்டி லெவல் மார்க்கட்டிங் என்ற பல பெயர்களில் ஆசை வார்த்தைகளால் மக்களின் மனதை கவர்ந்து விரைவாகவும் வேகமாகவும் பணம் சேர்க்கும் புதிய முறையை விரும்பி காலத்தை விரையம் செய்து கடன்காரர்களாகி கவலைகளில் மன அழுத்த நோய்க்கு ஆளாகி மருத்துவமனைகளில் குடும்பத்துடன் வளம்வருபவர்களில் நாம் எங்கே போகிறோம்?
     
பெற்ற குழந்தைகளை உடனடியாக மேதையாக்கி எதிர்வரும் காலத்தில் அவன் அல்லது அவள் கை நிறைய சம்பாதித்து பார்க்கும் ஆசையில் சாதாரண கல்விமுறை போதாது என்று மாநிலத்திலேயே உயர்ந்த பள்ளியில் சேர்த்து இண்டர்நேசனல் அல்லது சென்ட்ரல் போர்டு புத்தகமூட்டைகளை சுமந்து சென்று படிக்கும் கல்வியினால் பயனாவது என்ன? என்ற அறியாமையிலேயே படிக்கவைக்கும் பெற்றோர்கள் இன்று முதியோர் இல்லங்களில் உள்ளனர். இவர்களில் நாம் எங்கே போகிறோம்?

     கல்வியை கடைச்சரக்காக்கி வியாபாரம் செய்து வயிறு வளர்க்கும் வளமான பள்ளியிலும், கல்லூரியிலும் தன் குழந்தைகளை படிக்கவைக்க பாடுபடும் பாமரர்கள் வரிசையில் நாம் எங்கே போகிறோம்?
     
வரும்முன் காப்போம் என்ற எச்சரிக்கை உணர்வு இன்றி கண்டதை கண்டபடி தின்று உடம்பை கெடுத்து நோய்களுக்கு ஆளாகி சம்பாதித்த பணத்தை செலவு செய்ய மிகப்பெரிய மருத்துவமனைகளில் விடுதியில் அறை எடுத்து தங்குவதுபோல முன்பதிவு செய்து காத்திருப்பவர்கள், அறை கிடைத்ததும் அடையும் மகிழ்ச்சியின் எல்லையை பார்க்கும் பொழுது (உண்மையான மகிழ்ச்சி தெரியாததால்) மரணத்தின்  நுழைவாயிலில் தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கின்றவர்களுடன் நாம் எங்கே போகிறோம்?

     நோயின்றி வாழும் வழிமுறை ஆயிரம் இருக்க, அதையறியாமல் நோய்வந்தால் எந்த மருத்துவமனையில் எவ்வளவு செலவு செய்யலாம்?, எந்த மருத்துவ காப்பீடு சிறந்தது?  நான் இறந்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்? அதற்கு எவ்வளவு பிரீமியம் கட்டுவது? என மிகவும் முன் எச்சரிக்கை உணர்வு கொண்டு பெருநோய்களுக்கு ஆளாகி ஓய்வில்லாமல் உழைத்து சம்பாதித்த மொத்த பணத்தையும், கடன் வாங்கிய பணத்தையும் முழுவதுமாக தொலைத்துவிட்டு தன் குடும்பத்தையும் நடுத்தெருவிற்க்கு கொண்டு வந்த்தவர்களுடன் நாம் எங்கே போகிறோம்?
     
கல்வி கற்க அனுப்பினால் காதலிக்க கற்றுக்கொண்டு கண்டவர்களுடன் சுற்றி கண்ணியத்தை இழந்து கருத்து ஒற்றுமை இன்றி காவலர்கள் முன்னிலையில் கைப்பிடித்து கடைசியில் கட்டைப்பஞ்சாயத்து கைக்கொடுக்காமல் நீதிமன்றம் தலையிட்டு கட்டிய தாலியை கழற்றுவதற்க்கு போராடும் கணவன் மனைவியர்களுடன்  நாம் எங்கே போகிறோம்?
     
சொத்துக்காக ஆசைப்பட்டு சொந்த அண்ணன் தம்பிகளைக்கூட அனுபவிக்கவிடாமல் சுயநலமாய் வாழ்ந்து கோர்ட்டிற்க்கு சென்று குடும்ப மானத்தை குழைத்து இறுதியில் தானும் அனுபவிக்காமல், மற்றவர்களையும் அனுபவிக்க விடாமல் மடிந்தவர்கள் வரிசையில் நாம் எங்கே போகிறோம்?
     
சாதியென்ற பேரைச்சொல்லி ஓட்டு வாங்கும் அரசியல், சாதி சான்றிதல் இன்றி தேர்வு எழுதமுடியாத கல்வி, சாதியில்லை சாதியில்லை என்றும், எல்லோரும் ஓர் குலம் என்றும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து சாதித்தவர்களுடன் நாம் எங்கே போகிறோம்?

இன்றைய இளைய சமுதாயம், நம் நாட்டின் எதிர்காலத்தின் தூண்கள், அறிவியல் வளர்ச்சியின் ஆணிவேரான பாரத்த்தின் பெறுமை தெறியாது பண்னாட்டு தயாரிப்பான காலத்தை அழிக்கும் காலனான டி.வி., சினிமா, செல்போன், வீடியோ கேம்ஸ் போன்ற உபகரணங்களில் மதிமயங்கி வாழ்வை தொலைத்துக்கொண்டிருக்கின்றவர்களுடன் நாம் எங்கே போகிறோம்?

சர்கார் வேலை சவுகரியமான வேலை என்று படித்தவர்கள் அனைவருமே அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் காத்துக்கிடக்கின்றனர், வேலை கிடைத்தவர்களும், செய்யாத வேலைக்கு அரசு சம்பளம் போதாமல், கையூட்டு, போராட்டம், போன்ற வேலைகளில் கவனம் செலுத்திக்கொண்டிருப்பவர்களுடன் நாம் எங்கே போகிறோம்?

தங்களது வாரிசுகள்தான் (தன்னுடைய மகன், மகள் அல்லது பேரன், பேத்தி) எதிர்காலத்தில் வாழப்போவது என்பதையறியாது உயிர் வாழ்விற்க்கு ஆதாரமான விவசாயம், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் கலப்படம், போலி ஆகியவற்றாலும், இயற்கை அன்னையின் குழந்தைகளான நீர், நிலம் காற்று போன்றவைகளை மாசுபடுத்தி இனிவரும் காலம் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியாமல் செய்துகொண்டிருக்கின்ற புண்ணியமானவர்களுடன் நாம் எங்கே போகிறோம்?

படிக்கின்ற செய்தித்தாள்களில் பக்கத்துக்கு பக்கம் நாட்டின் தற்போதைய அவல நிலையை பார்த்தும், தனக்கும், அதற்க்கும் சம்பந்தமேயில்லாதது போல தினம் தினம் சூடான செய்திகளை சுவைத்து மகிழும் சிற்றுண்டி போல ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கண்ணியவான்களுடன் நாம் எங்கே போகிறோம்?

பணத்தைக்காட்டி பதவியை கேட்டு வாங்கும் அரசியல்வாதிகளை பணத்திற்க்கு ஆசைப்பட்டு ஓட்டுப்போட்டுத் தேர்ந்த்தெடுத்து விலைவாசி உயர்வு, மின்சாரம், குடிநீர் தட்டுப்பாடு போன்ற இன்னல்களையும் ஊக்கத்தொகையாக வாங்கிக் கொண்டு, மேலும் மேலும் பணத்தை மட்டுமே குறியாக சம்பாதிக்க நினைத்து மக்களின் அடிப்படை ஆதாரங்களைப் பற்றி சிறிதும் கவலை படாத, எதிர்காலத் தேவை, திட்டம் ஏதுமற்ற அரசியல்வாதிகளின் மத்தியில் நாம் எங்கே போகிறோம்?

எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில் உள்ளது. ஆனால் வருகினற தலைமுறை வருங்காலத்தில் நல்ல அரசை உருவாக்கி வளமான இந்தியாவை உருவாகும் என்ற நம்பிக்கை வீணாகும்படி அவர்களின் கையில் பான்பராக்கும், மதுபாட்டிலும், சிகரெட்டும் தான் உள்ளது. எதிர்கால நல் இந்தியாவை உருவாக்கும் இளைஞர்களின் மத்தியில் நாம் எங்கே போகிறோம்?

அன்னியர்களிடம் அடிமைப்பட்டிருந்த பாரதத்தை மீட்டு அடகுக்கடைக்காரனிடம் கொடுத்ததுபோல தரங்கெட்ட, தகுதியற்ற  அரசியல்வாதிகளிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு சிறிதும் கவலையின்றி அரசாங்கத்தின் அனுமதியுடன் கள்ளும், புகையும் குடித்து எதிர்காலத்தை தொலைத்து, அவர்கள் தரும் இலவசத்திற்க்கும் ஆசைப்பட்டு தன் தேவை ஒவ்வொன்றிற்க்கும், அவர்களிடம் கையேந்தி நிற்க்கும் அவல நிலையில் தன் குடும்பத்தை தவிக்க விட்டு, தன் நாட்டை சீரழித்தவனுடன் நாம் எங்கே போகிறோம்?

ஒரு பக்கம் பிளாஸ்டிக் பொருட்களின் வாயிலாக சூடாக வாங்கப்படும் உணவுபண்டங்கள் அதாவது டீ, காபி, சாம்பார், இரசம், போன்றவைகளை பிளாஸ்டிக் கவரில் கட்டி வாங்கி வந்து உண்ணும் பழக்கம், மற்றும் குடிக்க பயன்படுத்தும் ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியும் கப்புகள் போன்றவை சூட்டில் ஒருவித இரசாயன மாற்றத்திற்க்கு உட்பட்டு கேன்சர் போன்ற பெரு நோய்களுக்கு ஆளாகி தன் முடிவை தானே தேடும் அறியாமை மனிதர்களுடன் நாம் எங்கே போகிறோம்?

மற்றொரு பக்கம் அணு ஆராய்ச்சி என்று ஆயுதங்களாலும், புதிய தொழில் நுட்பத்தாலும் மக்களை சிற்து சிறிதாக அழிவுப்பாதையில் கொண்டு சென்று, இந்த பூமியை பாழ்படுத்தியது போதாது என்று இனி சந்திரனுக்கோ, செவ்வாய் கிரகத்துக்கோ மக்களை கொண்டு சென்று குடியமர்த்த போராடும் நவீன விஞ்ஞானிகளுடன் நாம் எங்கே போகிறோம்?

இறைபக்தி இன்னதென்று அறியாத இடைத்தரகர்களின் வாயிலாக இறைவனை அறிய முயற்ச்சிப்பவர்களும், மன அழுத்தம் போக மகத்தான தியானம் என பல பெயர்களில் பணம் பறிப்பவர்களின் பின்னால் பயிற்சி எடுப்பவர்கள் வரிசையில் நாம் எங்கே போகிறோம்?

நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மானிடரை ............ ?          

ஏன் இந்த அவல நிலை? அனைத்திற்க்கும் காரணம் ஆசை. ஆம் இத்தனைக்கும் நோக்கம் பணம் சம்பாதிக்கும் ஆசை. இன்றைய மனிதர்கள் தங்கள் குழந்தைகள் பிறக்கும் போதே முடிவு செய்துவிடுகின்றனர், இவன் நிச்சயமாக டாக்டர், இவன் நிச்சயமாக வக்கீல், இவன் எஞ்சினீயர், ............... அல்லது அரசு வேலை? ஆனால் ஒருவரும் என் மகன் அல்லது மகள்  நாட்டை காக்கும் ஞானியாகட்டும், உணவு கொடுக்கின்ற விவசாயி ஆகட்டும், ஆடை கொடுக்கின்ற நெசவாளியாகட்டும்  என்று விரும்புவதில்லை, பணம் ஒன்றே பிரதானம் என்பதால் அனைவரும் பணத்தை மட்டுமே குறியாக வைத்து ஓடுகின்றனர், அதன் வெளிப்பாடுதான் இன்றைய நிலை! பணத்தை மட்டும் வைத்து மரணத்திலிருந்து விடுபடமுடியுமா? பணத்தினால் பாசத்தை வாங்கிவிடமுடியுமா? தேவைக்கு மேல் பணம் சேர்த்து கடைசியில் கொண்டு செல்ல முடியுமா? சுனாமிகள் போதுமா? பூகம்பங்கள் தேவையா? சிந்தியுங்கள்! விரைவாக இதில் சிந்தியுங்கள்.

பொய்யெல்லாம் ஒன்றாய்ப் பொருத்திவைத்த பொய்யுடலை
மெய்யென்றான் மெய்யாய் விடுமோ பராபரமே.

மனிதன் மரணமில்லாத பெரு வாழ்வு வாழும் வழி நம் முன்னோர்கள் ஔவையார், திருவள்ளுவர், திருமூலர், தாயுமானவர், வள்ளலார் போன்ற பல்வேறு சித்தர் பெருமக்கள் நம்மிடையே வாழ்ந்து தெள்ளத்தெளிவாக நம்மை வாழவைக்க முயன்றிருக்கின்றனர்,  நாம் நம் அறியாமையாலும், வெளி நாட்டு மோகத்தாலும், நமது இயல்பை இழந்து மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இத்தனைக்கும் அடிப்படை ஒழுக்கத்தை போதிக்காத, பணம் மட்டுமே சம்பாதித்துக்கொண்டு, உயர் பதவிகளின் மூலம் பணம் மட்டுமே சம்ம்பதிப்பது எப்படி? என்று கற்றுக்கொடுக்கும் குரு பக்தியற்ற  கல்விமுறையும் ஒரு காரணம் ஆகும்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

இந்த நிலை மாற நாம் ஒவ்வொரு நபரும் முதலில் தன்னை மாற்றிக்கொள்கிறேன் என்று முன் வரவேண்டும், அப்பொழுதுதான் நாம் நம் குடும்பத்தை நல்வழியில் மாற்றி, அவர்கள் வாயிலாக சுற்றுப்புறத்தை மாற்றி, சுற்றமும் நட்பும் மாறியபின் இந்த ஊர் மக்கள் தெளிவடைந்து, மாநிலங்கள் மாற்றமடைந்து, இந்த தேசம் மிகப்பெரிய நல்ல ஆரோக்கியமான, ஊழலற்ற, சாதிகளற்ற சமூக மாற்றத்தை சந்திக்கும்.

எல்லோரும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல் வேரொன்றுமறியேன் பராபரமே.



இன்பமுடன் வாழ வழி

நான் நன்றாக வசதியாக நலமாக, வளமாக வாழ்ந்து வருகின்றேன்.  எனக்கு எதற்கு? ஆன்மீகம், நான், இறைநிலைகோயில், குளங்கள், மாயை,   சித்தர்கள் வாழ்ந்த இடங்கள், அவர்களை பற்றிய கதைகள் போன்ற விளக்கங்கள் எல்லாம் தேவையா?, அதைவிடுத்து சுற்றுலா இடங்கள், மற்ற உலகியல் செய்திகள், நண்பர்களுடன் உரையாடல்கள், உலக நடப்புகள் பற்றி தெரிந்து கொண்டு பொழுதை போக்க நினைக்கும் எனக்கு எதற்கு? இந்த தேவையற்ற விளக்கங்கள். என்று நீங்கள் முடிவு செய்து எனக்கு இறைநிலை அடைய ஆசை இல்லை. இந்த உலகத்திலேயே இன்பமுடன் வாழ வழி இருக்கிறதா? என்றால் இருக்கிறது.

        
நான் இதுவரை பத்து பிறவிகள் எடுத்துவிட்டேன்.  அதில் ஆறு பிறவிகள்  துன்ப பிறவியாகவும், நான்கு பிறவிகள் எல்லா வசதியுடன் கூடிய அற்புதப்பிறவியாக அனுபவித்தேன் என்று ஒருவன் தெரிந்து கொண்டால்.  அவன் இந்த இன்ப, துன்ப வாழ்கையை தாண்டி இந்த இரண்டும்  இல்லாத ஆனந்த அமைதியான வாழ்க்கை எப்படி கிடைக்கும்? அதற்கு என்ன வழி? என்று ஆராய்வான்.  அல்லது போனபிறவி எப்படி இன்பமாக அமைந்தது என்று ஆராய்ந்து , வந்த மற்றும் வரபோகும் பிறவியை எப்படி நல்ல இன்பமான பிறவியாக அமைத்துகொள்வது? என்று ஆராய்வான். இந்த இரண்டையும் தெரிந்து கொள்வதற்க்கு இந்த வாழ்க்கை இறைவன் ஆணைப்படி ஏற்படுத்தப்பட்டது.

       
இருப்பதோ கொஞ்ச காலம் என்று இறப்பு வருமோ? என்று தெரியாத நிலையில்,கண்டபடி வாழ்ந்து, கண்டதை படித்து வீண் காலம் கழித்தால் இறைநிலையை அடையவோ? அடுத்த பிறவியை நல்ல வளமான பிறவியாய் அமைதுக்கொள்ளவோ? முடியாது.  ஆன்மா அடுத்த பிறவி எடுக்கும் போது தன்னுடன் எதை எடுத்து செல்கிறது?. இந்த பிறவியில் சேர்த்த சொத்தையா, பணத்தையா, கல்வி அறிவையா, செல்வாக்கையா.  எதையும் இல்லை.  நாம் இந்த பிறவியில் செய்த பாவ புண்ணியங்களை மட்டும் தான் தன்னுடன் எடுத்து செல்கிறது.  அதன் அடிப்படையில்தான் வளமான வாழ்வோ? அல்லது தரித்திர வாழ்வோ? அமைகிறது.

      
இன்றைய கால கட்டத்தில் பொருள் சேர்ப்பதில் மட்டுமே முனைப்பாக பலரது வாழ்வு உள்ளது.  தனக்கு, தனது சந்ததிக்கு பொருள் சேர்ப்பதிலேயே காலத்தை செலவழிக்கிறார்கள்.  ஆனால் தன் அடுத்தபிறவிக்கு சேர்த்துவைக்கும் முறையை அறிய முயற்சிப்பதில்லை.  இந்த பிறவியில் பொருள் தேடுவதோடு நில்லாமல், புண்ணியத்தையும் திரட்டினால் அடுத்த பிறவி நலமாக அமையும்.  இந்த பிறவியில்  கிடைத்த பொருளை கொண்டு புண்ணியகாரியங்களை செய்து பாவ காரியங்களை செய்யாமல் இருந்தால் அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமையும்.  அதனால் கிடைக்கும் இந்த கொஞ்ச காலத்தில் புண்ணியங்களை திரட்டுவதில் நேரத்தை செலவு செய்தால் நலம் உண்டாகும்.  தொண்டும், தருமமுமே இந்த உலகத்திலேயே இன்பமுடன் வாழ வழி, இதனால் நம்  அடுத்த பிறவிக்கு வளம் சேர்க்கும். உலகியல் வாழ்க்கை சிறக்க வழிவகுக்கும்.

Saturday, July 28, 2012

இறைவனை அறிய முடியாது


               கிடைத்தர்க்கறிய இந்த மானிட பிறவி நமக்கு வாய்த்துள்ளது.அதனை வீணாக்காமல் பிறவி பயன் அடைய வேண்டும். அதற்க்கு முதலில் நாம் யார்? நம்மை படைத்தவர் யார்? என்பதனை அறிய வேண்டும்.
               
               ஒவ்வொருவரும் தனிமனித ஒழுக்கம், தாய் தந்தையரை வணங்குதல், குருவை பூசித்தல், குருவின் வாயிலாக நாம் யார்? என்பதை அறிந்து எங்கும் நிறைந்த இறைவனை அறிதல்.

               “உடம்பினைப் பெற்றப் பயனாவ தெல்லாம்
     உடம்பினும் உத்தமனைக் காண்”.

என்ற ஔவை பிராட்டியாரின் திருவாக்கு இந்த உடல் எடுத்த பயன் உத்தமனைக் (இறைவனை) காண்பது ஆகும்.

மேலும் திருமந்திரத்தில் திருமூலரும்
            
                “உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்     
`    உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
                  உடம்பினுள் உத்தமன் கோயில் கொண் டானென்று
                  உடம்பினை யானிருத் தோம்புகின் றேனே”.


 என்று கூறியுள்ளார்.ஆகவே இந்த மானிட உடலை நோயற்ற ஆரோக்கியமான உடலாக மாற்ற யோகாஸனம், பிராணாயாமம், தியானம் போன்ற பயிற்சிகள் வாயிலாக ஆரோக்கியமான தேகத்தைப் பெற்று
          
          “நான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
            வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்
            ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
            தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே”.

என்று தெய்வத் திருமூலர் அவர்கள் கூறியுள்ளது போல நம்மிடையே வாழுகின்ற நம் உடன்பிறவா சகோதர சகோதரிகளை நாம் செல்லும் இந்நல் வழியில் நம்முடன் கைசேர்த்து அழைத்து செல்ல முயலவேண்டும்.
            
           
           “கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
             நற்றாள் தொழாஅர் எனின்”.

என்று வள்ளுவர் சொன்னது போல எவ்வளவுதான் கற்றிருந்தாலும்  நாம் பெற்ற இந்தகல்வியின் பயன் நம்மைப் படைத்த இறைவனின் திருவடிகளை தொழாமல், அவனை அறியாமல்
            
           
           “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
             இறைவன் அடிசேரா தார்.

என்ற குறளுக்கேட்ப பிறவியாகிய பெரிய கடலை நாம் கடக்க முடியாது.

              ஞானிகளும், மகான்களும் சொல்லிச் சென்ற விசய ஞானங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டு நம்மிடையே வாழுகின்ற மற்றவர்களுக்கும் அந்த நற்க்கருத்துக்களையும், நற்பயிற்சிகளையும் தெரிவித்து அவர்களும் நம்மைப் போல இந்தப் பிறவிப் பெருங்கடலை நீந்த உதவி செய்ய வேண்டும்.
            

            ”கற்க கசடற கற்பவை கற்றபின்
              நிற்க அதற்கு தக.

என்ற குறள் வழியில் கற்கத் தகுந்த நல்ல விசயங்களை குற்றமறக் கற்று, கற்றபிறகுக் கற்றக் கல்விக்குத் தக்கவாறு அவ்வழியில் நிற்க வேண்டும்.
             
               மானிட வாழ்க்கையில் மிக முக்கியமான கல்வி என்று எடுத்துக் கொண்டால் தூய அறிவு வடிவாக விளங்கும். எங்கும் எதிலும் நிறைந்துள்ள இறைவனைப் பற்றி அறிகின்ற கல்விதான் உண்மையான கல்வியாகும். மற்றவையனைத்தும் பொருளாதாரத்துக்காகவும் ஆடம்பரமான வாழ்க்கை அமைத்துக் கொள்ளவும் தொழில் செய்து ஜீவனம் நடத்தவும் மட்டுமே பயன்படும் கல்வியாகும்.
            
                இன்றைய மனித இனம் ஆசையில் உழன்று செல்வத்தைச் சேர்த்து நோயில் வீழ்ந்து மடிவதைக் கண்ணாறக் காண்கின்றோம். இன்னிலை மாற ஒவ்வொரு மனிதனும் தன்னை அறிந்து, இறைவனை அறிதல் வேண்டும்.
           
                 என்றும், எப்பொழுதும் எங்கும் வியாபித்துள்ள உண்மைப் பொருளாகிய இறைவனை, பரமாத்மாவை அறியும் முயற்சியில் பல வகையான வழிமுறைகள் இருப்பினும், மனிதன் முதலில் தன் நிலை உணராமல் தன்னை அறியாமல் நான்தான் எல்லாம் செய்கிறேன் என்ற அகந்தை அழியாமல் இறைவனை அறிய முடியாது.
            

சும்மா இருக்கும் சுகம்

ஆன்மா தான் ஆனந்தம் , திருப்தி, முழுமை பெற்ற அறிவு என்று அறியாமையால் வெளியில் ஆனந்தத்தை,திருப்தியை, முழுமை அறிவை என்று வெளியே தேடியலைகின்றது. அதனால் பல தடவை பல பிறவி எடுக்கிறது. அதனால் மாயையாக பல துன்பங்களை அனுபவிக்கிறது. பின்னர் தியானத்தில் தன்னுள்ளே சென்று தேடிக் கொண்டிருந்தது. முடிவு கிடைக்க வில்லை. தனக்குள் தன்னை தவிர யாரும் இல்லை என்று புரிந்து கொண்டது. தனக்குள் தன்னை தவிர வேறு யாரும் இல்லை என்று தெரிந்த பிறகு அங்கே தன்னை தேடும் முயற்சி, அதாவது ஆனந்தம்,திருப்தி,முழுமை அறிவு என்பதை தேடும் முயற்சியை நிறுத்தி விடுகிறது.

இறைவனை தேடுதல், ஆராய்ச்சி போன்றவை இல்லாமல் இருக்க வேண்டும், அதாவது தேடுதல் என்ற எண்ணம் இல்லா (நிர் குணம்) நிலையில் இருந்தால் தான் ஆனந்தம் , திருப்தி,முழுமை அறிவு என்ற தெளிவு ஏற்படும். அதனால் எண்ணம் அற்ற நிலையில் இரவு பகல் ஏது? உள்ளே வெளியே ஏது ? மனிதன் மிருகம் ஏது ? மேலே கீழே ஏது ? சத்தம் அமைதி ஏது ? இன்பம் துன்பம் ஏது? இந்த இடமே சும்மா இருக்கும் சுகமாகும். தான் தானாய் நின்ற இடம் ஆகும்.




தன்னிலே இருந்த ஒன்றை நான் அறிந்ததிலையே
தன்னிலே இருந்த ஒன்றை நான் அறிந்தபின்
தன்னிலே நான் இருந்து ஓம்புகின்றேனே ..... சிவவாக்கியர்



நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை
நினைக்கிலேன் மறக்கிலேன் ...... சிவவாக்கியர்.



நினைக்கவும் இல்லை , மறக்கவும் இல்லை என்ற எண்ணமற்ற நிலையில் இருந்தால் சும்மா இருக்கும் சுகத்தை பெறலாம்.


எம்முள் உயிர் உயிருள் யாம் ..... வள்ளலார் .

உனக்குள் நான் எனக்குள் நீ ..... சிவவாக்கியர் .

இந்த உயிர் என்பது இந்த பிரபஞ்சமாக இருக்கிறது. நான் இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறேன் எனக்குள் உயிர் பிரபஞ்சமாக இருக்கிறது. இப்போது நாம் பிரபஞ்சத்தின் (ஆன்மா) ஒவ்வொரு செயலுக்கும் பத்து குணகேடுகளாகிய கோபம், காமம்,மதம் மாச்சரியம்,வஞ்சனை,எதிர்பார்ப்பு ....... போல் பத்து உணர்வுகளை காட்டி முரண்பட்டு வாழ்ந்து கொண்டுள்ளோம். வெளிப்புற நிகழுவுகளுக்கு நாம் ஒவ்வொரு நிமிடமும் எதை வெளிபடுதுகிறோம் என்று சிந்தித்தால் பத்து குணங்களின் வெளிபாடே ஆகும். எதையாவது இழந்துவிட்டால் வருத்தம், சம்பவங்களை நினைத்து பயம், கிடைக்காததால் ஏமாற்றம், கோபம், போன்ற பத்து குணங்களை தான் வெளிப்படுத்துகிறோம். 

இந்த பத்து குணங்கள் நம்முள்ளே இருக்கும் வரை நம்மால் நிம்மதியாக இருக்கமுடியாது. இந்த பத்து குணங்களை வெளியேற்றி விட்டால் நம்முள் இருக்கும் ஆனந்தத்தை உணரலாம் . அதனால் நாம் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் எழும் குணங்களை அராய்ந்து வெளியேற்றிவிட்டால் ஆனந்தத்தில் திளைக்கலாம். ஆனந்தம் அதிகரிக்க அதிகரிக்க சூழ்நிலைகள் மாற்றி அமையும் . பசி,பிணி,மூப்பு மறையும் . மரணமில்லா வாழ்வை நோக்கி படையெடுப்போம். அன்பு செய்தால் இந்த பத்து குணங்கள் மறையும், நிர்மலகுணம், ஆராய்ச்சி இல்லா குணம் கொண்டு இருந்தால் ஆனந்தம் அமைதியில் திளைத்து , மூழ்கி, ஆனந்தமாகவே ஆகலாம்.

ஒரு எலிக்கு அன்பு செய்ய நினைத்து பூனையிடம் இருந்து காப்பாற்றினால் பூனைக்கு கேடு செய்தது போல் ஆகிவிடுமே. அப்படி என்றால் எல்லாரிடமும் அன்பு செய்வது எப்படி?. இது எலி இது பூனை என்ற உருவ பேதத்தை மறந்து எல்லாமே இறைவன் என்று அன்பு செய்தால் அங்கே நான் மற்றும் இறைவன் என்ற இரண்டு மட்டுமே இருக்கும். அந்த நிலையில் அன்பு செய்தால் நாமும் இறைவனும் ஒன்றாவோம். அந்த அன்பு நிலையில் பத்து குணங்களும் மறைந்து போகும். அராய்ச்சி இல்லா நிலை உண்டாகும். நான் என்பது மறைந்து போகும். ஆனந்த நிலை உருவாகும் . இதுவே சும்மா இருக்கும் நிலை.


அன்பும் சிவமும் இரண்டு என்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது அறிந்த பின்னர்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே ........


”என் செயலால் ஆவது ஒன்றும் இல்லை எல்லாம் நின் செயலாலே” 

என்று நிர்மலத்தில் (சும்மா இருந்தால்) இருந்தால் சகஜ மார்கத்தாலே இறைநிலையை அடையலாம் .

இந்த முரண்பாட்டை நீக்கி நான் நிர்குணமாக எனக்குள்ளே சும்மா இருந்தால் இந்த உயிரும் உடலும் இணைந்து சிவசக்தி மயமாகி விடும். இதுவே இயற்கையோடு இணக்கமாக வாழ்தல் ஆகும்.

Thursday, July 26, 2012

சித்தர் கல்வி என்ற சாகாக் கல்வி


சித்தர் கல்வி என்பது நமது உடல், மனம், ஆன்மா இவற்றை சுத்தப்படுத்தி ஒளியாக்கி பேரான்மாவிடம் கலப்பது ஆகும்.

1. இக்கல்வியை கற்றால் இறப்பை தவிர்த்து ஒளி உடல் பெற்று மரணத்தை வெல்லலாம். இதற்கு “வாசியோகம்” செய்து 72,000 நாடி-நரம்புகளை சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்து ஒளி உடல் பெற்றால் அதுதான் “முக்தி” நிலையாகும். அதன் பின் மரணம் கிடையாது. இது தான் சாகாக் கல்வியாகும்.

2. இப்பிறப்பில் சிலர் பல பட்டப்படிப்பு படித்து விடுவார்கள். அவர்கள் இறந்து மீண்டும் அடுத்த பிறவியில் ஆரம்பக்கல்வியிலிருந்து படிக்கவேண்டும். ஆனால் சித்தர் கல்வியை ஒருவர் கற்றுக்கொள்ளும் போது அவர் சூழ்நிலை, உடல்நிலை காரணமாக இறக்க நேர்ந்தால் அவர் அப்பிறவியில் 35,000 நாடி நரம்புகளை சுத்தம் செய்து இருந்தால், அடுத்த பிறவியில் 35,000 நாடி நரம்புகளில் இருந்து தான் தொடங்கும். ஆகவே ஏற்கனேவே போன பிறவியில் கற்ற சித்தர் கல்வி மறுபிறவியிலும் தொடர்கிறது. ஆகையால் இது சாகாக் கல்வியாகும்.

3. ஒருவர் இப்பிறவியில் சித்தர் கல்வியை கற்றுக் கொள்ளும் போது பிராணசக்தியை அதிகப்படுத்தி உடலை சுத்தப்படுத்தும் போது, நம்முடைய தேகம் ஒளிநிலையை அடைந்தால் இறப்பு கிடையாது. ஆகவே இறப்பு இல்லாததால் இது சாகாக் கல்வியாகும்.








சுவாசம் 

சுவாசம் என்றால் காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுவது என்று கூறப்படுகிறது. மூக்கின் இரண்டு துவாரங்களிலும் சுவாசம் நடைபெறுகிறது. வலது நாசி துவாரத்தின் மூலம் நடைபெறும் சுவாசத்தை சூரிய சுவாசம் என்றும், இடது நாசி துவாரத்தின் மூலம் நடைபெறும் சுவாசத்தை சந்திர சுவாசம் என்றும் கூறப்படுகிறது. சுவாசமானது வலது நாசியில் தொண்ணூறு சதவிகிதம் நடைபெறும் போது, இடது நாசியில் பத்து சதவிகிதம் நடைபெறும். அப்போது உடலில் வெப்பத்தன்மை இருக்கும். அதனால் இதனை சூரிய சுவாசம் என்று கூறுவர். இதேபோல் இடது நாசியில் தொண்ணூறு சதவிகிதம் நடைபெறும் போது, வலது நாசியில் சுவாசம் பத்து சதவிகிதம் நடைபெறும். அப்போது உடலில் குளிர்ச்சியான தன்மை, மிதமான வெப்பம் இருக்கும். அதனால் இதனை சந்திர சுவாசம் என்று கூறுவர்

இரண்டு நாசி வழியாகவும் சரிசமமாக நடைபெறும் சுவாசத்தை “சுழிமுனா சுவாசம்” என்று கூறுவர். இந்த சுவாசம் நடைபெறும் போது நமது உடலில் வெப்பம், குளிர்ச்சித்தன்மை இல்லாமல் அதிக வெப்பநிலை இருக்கும். அதனால் இதனை சுழிமுனா சுவாசம் என்று கூறுவர்.

இந்த மூன்று சுவாசங்கள் நமது உடல் முழுவதும் பரவுகிறது. சூரிய சுவாசமானது மூக்கின் வலது நாசி துவாரத்திலிருந்து இடது கால் வரை 16 ஸ்தானங்கள் ஆக 32 ஸ்தானங்கள் ஏறி இறங்குகிறது. அதே போல் சந்திர சுவாசமானது மூக்கின் இடது நாசி துவாரத்திலிருந்து வலது கால் வரை 16 ஸ்தானங்கள் ஆக 32 ஸ்தானங்கள் ஏறி இறங்குகிறது. ஆனால் சுழிமுனா சுவாசமோ மூக்கின் நுனியிலிருந்து கால்வரை உடல் முழுவதும் பரவி செல்கிறது. இவையே நமது உடலில் மூன்று சுவாசங்களின் செயல்பாடாகும்.

பிராணாயாமம்:

உலக வழக்கில் பிராணாயாமம் என்றால் சுவாசத்தை சரிசெய்யக்கூடிய பயிற்சி என்று கருதப்படுகிறது. அதாவது மூன்று சுவாசங்களையும் சரிவர (ஒரே அளவாக) ஓடச்செய்வது தான் பிராணாயாமம் என்று கருதப்படுகிறது.

மேலும் இதன் மூலம் உடலுக்கு, காற்றிலிருந்து கிடைக்கக்கூடிய பிராண சக்தியின் அளவு அதிகமாக கிடைப்பதாக கருதப்படுகிறது. இது உண்மையில் பிராணாயாமம் என்று சொல்வதைவிட சீரான சுவாசப்பயிற்சி என்று மக்களால் கருதப்படுகிறது. அதனால் தான் மக்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், யோகசனம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். ஏனென்றால் இவையனைத்தும் சுவாசத்தை சீராக வைத்துக்கொண்டு, தேகம் சீராக இயங்க உதவுகிறது

ஆனால் உண்மையில், பிராணயாமம் என்பது சுவாசத்தை மட்டும் சீராக வைத்திருக்க உதவும் ஒரு விஷயமாக இல்லாமல், சுவாசக்கலைகள், தேகம், மனம், உயிர், ஆன்மா போன்ற அனைத்தையும் சரிவர இயங்க உதவிப்புரியும் ஒரு பயிற்சியாக இருக்கிறது. ஆனால் காமம், கோபம், குரோதம், பொறாமை போன்ற அவஸ்தைகள் மூலம் சுவாசம் கட்டுப்படாமல் போகிறது. அதனால் நாம் உயிராற்றலை இழக்கிறோம்.

பிராணாயாம பயிற்சி என்றால் நமது உடலில் சூரியன், சந்திரன், சுழிமுனா என்ற மூன்று சுவாசங்கள் நடைபெறுகிறது. இந்த சுவாசங்களை ஒரே கலையாக்கி பிராணாயாம பயிற்சி செய்யும்போது அங்கு உயிராற்றல் அந்த சுவாசத்தோடு கலந்து உடல் முழுவதும் சென்று எல்லா நாடி நரம்புகளையும், உறுப்புகளையும் பலப்படுத்திகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் பேணப்படுகிறது. இப்பயிற்சியில் மட்டும் தான் மற்ற பிராணாயாம பயிற்சியைவிட உயிராற்றல் அதிகமாக உற்பத்தியாகிறது.

அதனால் மனதால், காமம், கோபம் குரோதம், பொறாமை போன்ற உணர்வுகளை கட்டுப்பாடாக வைத்திருக்க உதவுகிறது. அதனால் இந்த உணர்வுகளின் மூலம் உயிராற்றல் செலவாகாமல் இருக்கிறது. ஆகையால் சுவாசத்தில், உயிராற்றலை கலக்கக்கூடிய பயிற்சிதான் பிராணாயாமம் என்பதாகும். இந்த பயிற்சியை சித்தர்கள் செய்து வந்தனர். சித்தர்கள் பரிபாஷையில் இந்த பயிற்சிக்கு "வாசி" என்று பெயர். அதனால் தான் இந்த பிராணாயாம பயிற்சியை நாங்கள் "வாசி" என்றே அழைக்கிறோம்.

தியானம்

தியானம் என்றால் மனதை ஒருநிலை படுத்துவதாகும். சரி மனதை எதில் ஒருநிலை படுத்துவது?

காற்றுக்கு ஒப்பிட்டு மனதை நமது சித்தர்கள் கூறி இருக்கிறார்கள். பஞ்ச பூதத்தில் காற்று மனமாக சித்திரிக்கப்பட்டு இருக்கிறது. ஆகையால் காற்று வடிவமான மனம் அலைபாய்கிறது. அப்போது அதை நிறுத்தினால், நிதானமாக சிந்திக்கக்கூடிய ஆற்றல் கிடைக்கும்.

மனதை எதில் நிலைபெறச் செய்யவேண்டும்?


மனதை உடலில் ஓர் இடத்தில் நிற்க வைத்தால் அங்கு வெப்பம் உண்டாகும். அப்போது அங்கு உயிராற்றல் வந்து அதனுடன் கூடி, மனம் ஒரு திட நிலை பொருள் போல உருவாகி, மணிப்போன்று உருவாகி, நமதுஉடலில் உள்ள அனைத்து உணர்வுகளும், எண்ணங்களும் அதில் சேர்ந்து அந்த மணியை, அதாவது மனதை உணர ஆரம்பிக்கும். அது ஒரு மணியை போல விளங்கும். இதை உருவாக்கும் நிலைக்குத்தான் தியானம் என்று பெயர்.

அப்போது மனதில் எண்ணங்கள் பல இல்லாமல், ஒரே எண்ணம் அந்த உணர்வில் மட்டும் தான் இருக்கும். இந்த தியானப் பயிற்சி தான் எந்த ஒரு விஷயத்தில் மனத்தை செலுத்தினாலும், மனம் அதில் ஒன்று பட்டு, நிலைத்துநின்று, அந்த விஷயத்தில் தெளிவான முடிவை எடுக்க உதவும். மேலும் நமக்கு வரும் துன்பங்களை எதிர்கொண்டு வெற்றி அடைய முடியும். இதுதான் தியானத்தின் பலன் ஆகும்.

மனதை உயிராற்றலில் ஒன்றுப்படுத்துதல் தியானம் ஆகும். தியானத்தின் பலன் ஆறாவது அறிவை, ( மணி உருவாக்குவதை ) அறிவது ஆகும்.

மணியை உற்பத்தி செய்பவன் மனிதன் ஆகிறான்.

மனம்:

மனம் என்றால் பஞ்ச பூத அம்சங்களில் ஒன்றான காற்று ஆகும். காற்றானது இந்த பூமியை எப்படி சுற்றி ஒரு கவசம் போல் இருக்கிறதோ, அதுபோல நமது மனமும் நமது எல்லா உணர்வுகளையும், உடலையும் சூழ்ந்துள்ளது. ஆகவே எல்லா விதமான உணர்வுகளும், செயலும் ஐம்புலன்களும் மனதின் வழியே செயல்படுகிறது. இந்த மனம்தான் பார்க்கிறது, கேட்கிறது, ரசிக்கிறது, உணர்கிறது, சுவைக்கிறது, நுகர்கிறது. இப்படி செயல்படுகிற மனம் ஒவ்வொரு பிறவியிலும் ஓர் அனுபவத்தை பெறுகிறது.


· ஓர் அறிவாய் இருக்கின்றபோது உணர்வை பெறுகிறது.

· ஈரறிவாய் இருக்கின்றபோது உணர்கிறது மற்றும் நுகர்கிறது.

· 3 - வது அறிவாய் இருக்கின்றபோது உணர்வு, நுகர்வு மற்றும் கேட்கிறது.

· 4 - வது அறிவாய் இருக்கின்றபோது உணர்வு, நுகர்வு, கேட்பது மற்றும் பார்க்கிறது.

· 5 - வது அறிவாய் இருக்கின்றபோது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது மற்றும் சுவைப்பது,

· 6 - வது அறிவாய் இருக்கின்றபோது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது, சுவைப்பது மற்றும் சிந்திப்பது.

இப்படி ஒவ்வொரு அறிவிலும் ஒவ்வொரு அனுபவத்தைப் பெற்று, மனித பிறவியில் ஆறு அறிவை பெறுகிறது. ஆறாவது அறிவாகிய சிந்தித்தல் என்றால் மனதை ஒருநிலைப் படுத்தி, அதனுடைய சக்தியை உணர்வது. இதுதான் ஆறாவது அறிவு. இந்த அறிவை முழுமையாக பெறுவதற்கு பிராணாயாமம், தியானம் செய்ய வேண்டும். இவற்றிற்கெல்லாம் காரணம் மனம்.

ஆகவே இந்நிலையை பெறாத மற்ற மனிதர்கள் மிருகங்கள் போல் சாப்பிடுவது, உறங்குவது என சிந்தித்தலைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர். இப்படி ஏன் என்றால், இந்த மனதின் பயணம் ஓர் அணுமுதல் புலன்களின் இச்சை வழியே நடந்து வந்ததால் மனிதன் ஆன பிறகும் அந்நிலையில் இருந்து விலகாமல், அதே நிலை தொடர்கிறது. ஆகவே மனித வாழ்க்கையில் அவனது மனம், காமம், குரோதம், லோபம், மதம், மாச்சரியம், டம்பம், பொறாமை, மோகம் ஆகிய இந்த எட்டு அவஸ்தைகளும், ஐம்புலன்களும் சேர்ந்து மனத்தை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது.

ஆகவே மனதை இதனிடம் இருந்து பிரித்து எடுப்பது தான் ஆறவாது அறிவின் செயலாகும். மனிதன் இதை பயன்படுத்தாத வரைக்கும் மிருகத் தன்மையோடுதான் வாழ்ந்து வருகிறான். ஆகவே இந்த உணர்வுகளை மனம் மற்றவரிடம் செயல் படுத்தி பார்த்து இன்பம் அடைகிறது. இதனால் மனிதன் தன்னுடைய நிலையில் இருந்து உயர்வதற்கு வழி, புலன்களையும், மனதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும். அப்போது மனத்தின் சக்தியையும், இறையாற்றலையும் உணர்ந்து தன்னுடைய நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். இதுதான் மனதின் செயல் ஆகும்.

குறிப்பு: மனிதனுக்கு காமத்தின் மீது மட்டும் ஏன் அதீத ஈடுபாடு என்றால், எல்லா பிறவிகளிலும் இனப்பெருக்கத்திற்காக அதிக அளவில் செயல்படும் உணர்வு காமம் தான். ஆகவே தான் மனிதப்பிறவியில் அதே நிலையில் இருப்பதால்தான் இறைத்தன்மையை அறியமுடியாமல் தவிக்கிறது.

மனதின் செயல் - மகிழ்ச்சி
அனைத்து மக்களும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க விரும்புகின்றனர். ஆனால் அந்த சந்தோஷம் உலக பொருட்களில் இருப்பதாகவே எண்ணுகின்றனர். ஆனால் அந்த ஒரு பொருளானது, அந்த சந்தோஷத்தை சில நிமிடங்கள், சில மணி நேரம், சில நாட்கள் அல்லது சில ஆண்டுகள் என இந்த வரையறைக்குள் தான் அது சந்தோஷத்தைக் கொடுக்க முடியும். ஆனால் உலகம் இப்படி பல பொருட்களை தன்னிடத்தே வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருப்பதாக எண்ணிக்கொண்டு, போட்டியும், பொறாமையும், துன்பங்களையும், தீய எண்ணங்களையும் உண்டாக்கி இன்பமாக இருப்பதாக எண்ணிக்கொண்டு மரணத்தை நோக்கி தன்னுடைய பயணத்தை தொடர்கிறது.

இந்த உலக வாழ்க்கையில் ஒரு வீடு வாங்குவதும், ஒரு கார் வாங்குவதும் தான் நமக்கு தகுதி என்று எண்ணிக்கொண்டு படித்தவர்களும், படிக்காதவர்களும் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் செயல் ஒரு மனிதனுக்கு உள்ள தகுதியை நிர்ணயிக்காது. ஆனால் போட்டியும், பொறாமையும், தீய எண்ணங்களுடனும் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் போட்டியும், பொறாமையும், தீய எண்ணங்களும் இல்லாமல், இந்த உலக பொருட்களை வைத்துக்கொண்டு மிக மிக இன்பமாக வாழ நமக்கு ஓர் தகுதியான நிலையை நாம் நமக்கு ஏற்படுத்த வேண்டும். இந்த தகுதி எதுவென்றால் பிற பொருட்களின் மூலம் வரக்கூடிய எண்ணங்களை அலசி ஆராயக்கூடிய மனப்பக்குவம் தேவை.

இந்த மனப்பக்குவதிற்கு மருந்து எது என்றால் மனத்தை ஒருநிலைப் படுத்துவது. மருந்து என்று ஏன் கூறினேன் என்றால், பொதுவாகவே மருந்து என்றால் சிறிது கசப்புத் தன்மை உடையது தான். ஆனால் அது தான் நோயைத் தீர்க்கும். அது போல் உங்கள் மனமானது உலக விஷயங்களில் இருந்து மனதை பக்குவப்படுத்திக் கொள்வதினால் தான் , மனமானது ஒரு பொருளிலிருந்து ஏற்படக் கூடிய எண்ணங்களை அலசி ஆராய்ந்து, (அதாவது) அந்த பொருளினால் ஏற்படக்கூடிய இன்பங்கள், துன்பங்கள், போட்டிகள், பொறாமைகள் போன்ற நிலைகளை ஆராய்ந்து முடிவெடுக்கும். அப்போது தான் நமக்குள் இருக்கூடிய சந்தோஷமான சூழ்நிலை உருவாகும்.

அதாவது எப்படி என்றால் கோபம், பொறாமை, தீய எண்ணங்கள், துன்பம் இவற்றில் சந்தோஷத்தை கலப்பது. இந்த குணங்கள் இருந்தாலும் சந்தோஷமான மனநிலை ஏற்படும். போட்டியும், பொறாமையும் மனதில் இருந்தாலும் அதை உடனே நீக்குவதற்கு இந்த சந்தோஷம் உதவும். எந்த சந்தோஷம் என்றால் மனதை ஒருநிலைப் படுத்துவதால் ஏற்படக்கூடிய சந்தோஷம், (ஆனந்தம்). இந்நிலையில் இருந்தால் உலக வாழ்க்கையில் வெற்றி பெறலாம். ஞான வாழ்க்கையை அடையலாம்

மணி

மணி என்பது யோகம் பயில்பவர்களுக்கு ஒரு முக்கியமான தகுதியை கொடுக்கக்கூடிய நிலையாகும்.

மணி என்றால் என்ன?

மணி என்றால் ஒரு திடநிலையில் உள்ள ஒரு பொருள் என்று நாம் அறிவோம். அதுபோல் நாம், நம்முடைய மனதை ஓர் இடத்தில் நிலைபெற செய்யும் போது அந்த இடத்தில் மனம், காற்றின் வடிவாமாக இருக்கிறது. அப்போது அங்கு உயிராற்றல், மனம் நிற்கும் இடத்தில் வந்து சேர்கிறது. அந்த நிலையை, அந்த உயிரற்றலை நம்மால் உணர முடியும். அப்பொழுது அந்த இடத்தில், மனம் ஒரு உருண்டையான வடிவத்தை உணர்கிறது. அதற்கு பெயர் தான் மணியாகும்.

இது எப்படி உருவாகுகிறது என்று பார்ப்போம். முதலில் மனதை ஒரு இடத்தில் நிறுத்தும் போது எண்ணங்கள் கட்டுப் படுகிறது. அப்பொழுது ஒரே ஒரு எண்ணம் மட்டும் தான் இருக்கும், அது என்னவென்றால், மனதை ஒரு இடத்தில் நிறுத்துகிறோம் என்ற எண்ணம் தான் இருக்கும். நமது மூக்கின் வழியாக ஓடக்கூடிய சுவாசம் ஆனது மெதுவாக உடலுக்குள்ளே ஓட ஆரம்பிக்கும். அப்பொழுது உயிராற்றல் அந்த இடத்தில் சுவாசத்துடன் கலக்கும், உடல் சிறிது வெப்பம் அடையும். அடுத்ததாக நம் உடலை இயக்கக்கூடிய தசவாயூக்களும் (10 வித வாயூக்களும்) மெதுவாக வெப்பம் அடைந்து அந்த வாயுக்களும் உயிராற்றலை பெற்று அனைத்து ஆங்ஞா சக்கரமும் இயங்கி கொண்டிருப்பதால், மனம் ஒளிநிலையை அடைகிறது, அப்பொழுது அவஸ்தைகள் குறைவதால் எண்ணங்கள் கட்டுப்படுகிறது. அதனால் நாம் எந்த விஷயத்திலும் விருப்பு-வெறுப்பு இன்றி நிதானமாக செயல்பட முடிகிறது. இதன் மூலம் நம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளில் வெற்றிக்கொண்டு அமைதியாக வாழ முடிகிறது.

ஆகவே மணி உற்பத்தி ஆவதன் மூலம் வாழ்க்கையை அமைதியாக நடத்துவது தான் இறைநிலையை அடைய முதல் படியாகும்.

உயிர்

பஞ்ச பூதங்களின் கூட்டு தான் உயிராகும். நீர், நெருப்பு, காற்று, பூமி, ஆகாயம் இந்த கூட்டுக் கலவையில் உள்ள அணுக்கள் ஒன்று சேர்ந்து ஓர் உயிராக உருவாகிறது. இது எப்படி என்றால், ஓர் விதையை மண்ணில் போட்டு தண்ணீர் ஊற்றி அது வளர்கிறது. அது வளர்வதற்க்கு தேவையான பொருட்களாக மண், நிலம், நீர், காற்று, வெப்பம், சூரிய ஒளி, சந்திர ஒளி அவை சேர்ந்ததே திறந்த வெளியான ஆகாயமாகும்.

இதில் ஒரு உயிர் உற்பத்தியாவதற்கு பஞ்ச பூத சக்தி எப்படி உதவுகிறது என்று நமக்கு தெரிகிறது. பல உயிரினங்களாக இந்த பஞ்ச பூத சக்தி உருவெடுத்து, கடைசியில் மனித ரூபம் எடுக்கிறது. அப்போது பஞ்ச பூத சக்தியின் நிலை என்ன என்றால் காற்றானது மனமாகவும், தண்ணீரானது உயிராகவும், நெருப்பானது உடல் இயங்கும் சக்தியாகவும், மண் என்பது உடலாகவும், ஆகாயம் என்பது ஆத்மாவாகவும் இருக்கும் இடமாக விளங்குகிறது. இதுதான் மனித ரூபம். இது அனைத்தும் சேர்ந்து ஓர் மனித உயிராக உருவெடுக்கிறது

தூங்காமல் தூங்கும் நிலை

மனித உடலின் அடிப்படை ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியமான ஒன்று. ஒரு நாளின் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை நாம் தூங்குவதில்தான் செலவழிக்கிறோம். நவீன அறிவியலும் கூட நல்ல, ஆழ்ந்த தூக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது. தூங்குவதன் மூலம் உடலுக்கும் உள்ளத்திற்கும் தேவையான ஓய்வும், அமைதியும் கிடைக்கிறது.

சித்தர் பெருமக்களும் தூக்கம் பற்றி நிறையவே கூறியிருக்கின்றனர். தூக்கம் என்பது மனிதனுக்கு மிக அவசியமானது என்றாலும் கூட சித்தர்களின் கருத்தில் தூக்கம் என்பது உடல் தளர்வாகவும் உள்ளம் ஒரு முகமாகவும் இருக்கும் ஒரு நிலையையே குறிப்பிடுகின்றனர். இதனை தூங்காமல் தூங்கும் நிலை என்கின்றனர். பத்திரகிரியார் கூட இதனை பின்வருமாறு குறிப்பிடுகிறார்


ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்?
பரிவாக நித்திரைதான் வேண்டாமப்பா
நேரப்பா ராக்கால நித்திரைதான்பண்ண
நிலையாகச் சூட்சமொன்று நிகழ்த்துறேன்கேள்
வாரப்பா வரிசையாய்க் கால்தான்னீட்டி
வகையாக நித்திரைதான் பண்ணவேண்டாம்
ஓரப்பா ஒருபக்க மாகச்சாய்ந்து
உத்தமனே மேற்கையை மேற்கொள்வாயே.



கொள்ளப்பா ஒன்றின்மேல் சாய்ந்துகொண்டு
குறிப்பா நித்திரை செய்துநீங்க
அள்ளப்பா அஷ்டாங்க யோகம்பாரு
அப்பனே சிவயோகம் வாசியோகம்
நள்ளப்பா பிராணாய மவுனயோகம்
நலமான கவுனத்தின் யோகம்பாரு
வள்ளப்பா வாசியது கீழ்நோக்காது
வகையாக மேனோக்கி யேறும்பாரே.
கொள்ளப்பா ஒன்றின்மேல் சாய்ந்துகொண்டு
குறிப்பா நித்திரை செய்துநீங்க
அள்ளப்பா அஷ்டாங்க யோகம்பாரு
அப்பனே சிவயோகம் வாசியோகம்
நள்ளப்பா பிராணாய மவுனயோகம்
நலமான கவுனத்தின் யோகம்பாரு
வள்ளப்பா வாசியது கீழ்நோக்காது
வகையாக மேனோக்கி யேறும்பாரே.


தூங்காமல் தூங்கியிருக்கும் நிலை உயர்வான விழிப்பு நிலை. இந்த நிலையில் பிரபஞ்ச ஆற்றலோடு இணைந்து நிறைந்து இருக்கும் நிலை என்கின்றனர். மேலும் நாம் தூங்கும் போது நம்முடைய மூச்சு விரயமாவதாகவும் சித்தர்களின் பாடல்களில் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அகத்தியரும் கூட தனது பாடல் ஒன்றில் உண்ணும் போதும், உறங்கும் போதும், உறவு கொள்ளும் போதும் மூச்சை விரயமாக்கலாகாது என்கிறார். சித்தர்கள் கூறிடும் இத்தகைய உறக்க நிலை மிக உயர்வான நிலையாகும். முயற்சியும் பயிற்சியும் உள்ள எவரும் இத்தகைய நிலையை அடைய முடியும்.


யோகப் பயிற்சியின் போதே தூக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிற குறிப்பும் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது. அதுவும் பகலில் தூங்கவே கூடாது என்று வலியுறுத்தப் படுகிறது. சரி, இரவில் எப்படி தூங்குவதாம்?, அதற்கும் ஒரு சூட்சும முறையை தேரையர் தனது “மருத்துவ காவியம்”என்னும் நூலில் பின் வருமாறு விளக்குகிறார்.

பாரப்பா சிவயோகம் பண்ணும்பேர்க்கு
பொதுவில் நாம் எல்லோரும் தூங்குவதைப் போல மட்ட மல்லாந்து கால்களை நீட்டி நிமிர்ந்து உறங்கக் கூடாதாம். ஒரு பக்கமாக சாய்ந்து கையை தலைக்கு கீழாக வைத்து அதன்மேல் தலையை வைத்து உறங்கவேண்டுமாம். அப்படி உறங்குவதால் வாசி கீழ் நோக்கி செல்லாமல் மேல்நோக்கி ஏறுமாம். இதனால் சிவ யோகம், வாசி யோகம், பிரணாயாமம், மவுன யோகம், கெவுன யோகம் அனைத்தும் இலகுவாக சித்திக்குமாம்.


இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் இதெல்லாம் சாத்தியமா? என்கிற கேள்வி உங்களுக்கு நிச்சயம் வந்திருக்கும். இதன் சாத்திய அசாத்தியங்களை அவரவர்களது வாழ்க்கை முறையே முடிவுசெய்யும்.

தியானமும் - பிராணாயாமமும்


தியானம், பிராணாயாமம் செய்வதால் ஏற்படும்  நற்பயன்கள்

பிராணாயாமம்:
1.       உடல் நலம்.
2.       நோய்களின் தீவிரத்தை குறைத்தல்.
3.       சுவாசத்தை சீராக இயக்குதல்.
தியானம்:
1.       மனநலம் உண்டாக்குதல்.
2.       எண்ணங்களை கட்டுப்படுத்தி சீராக ஆக்குதல்.
3.  மனதில் ஏற்படும் தேவையற்றபயம், கவலை முதலியவற்றை      போக்குதல்.
4.  அனைத்து பிரச்சனைகளிலும் மனதை முழுமையாக செலுத்தி தீர்வுகாணல்.
5.       குடும்ப உறவுகளை சீராக வைத்து கொள்ளுதல்.
6.       வாழ்க்கையில் சந்தோஷமாக இருத்தல்.
7. வாழ்க்கையில அனைத்து விஷயங்களையும் தாங்கும் சக்தி பெறுதல்.

Wednesday, July 25, 2012

திருப்தி

நாம் இந்த உலகில் என்ன தேடிகொண்டிருகிறோம். சிறிது அலசிபார்போம்.ஒருவன் பசிக்கு உணவு கிடைத்தால் பசியடங்கியபின் திருப்தி ஆகிறான். ஒருவன் தான் ஒரு பெரிய பணக்காரனாக ஆக ஆசை பட்டு அந்த ஆசை நிறைவேறிய பின் திருப்தி அடைகிறான். ஒருவன் தன் மகனை நன்றாக படிக்க வைத்து பெரிய பட்டதாரியாக ஆனபின் தன் மகனின் நிலையை நினைத்து திருப்தி அடைகிறான் . இந்த நிகழ்வுகளில் திருப்தி என்பதே இறுதியான அனுபவமாக உள்ளதை பார்க்கலாம். நாம் ஒவ்வொரு செயலும் திருப்தி பெறவே செய்துகொண்டிருக்கிறோம் என்பது நன்றாக விளங்கும். முழுமையான திருப்தி எங்கே கிடைக்கும் என்ற தேடலில் நாம் வாழ்க்கை பயணத்தை தொடர்கிறோம். இறக்கும் வரை தொடர்கிறோம். மறுபடியும் பிறக்கிறோம் திருப்தியை தேடி தேடி. காலசக்கரத்தில் தொடர்ந்து சுழல்கிறோம்.

திருப்தி எங்கே உருவாகிறது என்று பார்த்தால் நம் உள்ளே தான் உருவாகுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். நம் உள்ளே உருவாகும் திருப்தியை ஏன் வெளியே தேடவேண்டும். நாமே திருப்தியின் சுயரூபமாக இருக்கிறோம் என்பதை தெரியாததால் தான் இந்த நிலை ஏற்படுகிறது. நாம் திருப்தியாக உள்ளோம் என்பதை எப்படி தெரிந்து தெளிவது. நாம் யார்? என்ற தெளிவை பெரும்போது நம்முள் எல்லாம் அடக்கம் என்பதை புரிந்து மோனநிலையை அடைந்தால் இறைநிலை அடைந்து இன்புருவாக பிறவாநிலை அடையலாம்.

இப்போது நம்மில் திருப்தி இல்லை என்ற அறியாமை நீங்கி மாயையில் நாம் இருக்கிறோம் என்ற தெளிவை பெற்றால் எப்போதுமே திருப்தியாக இறைநிலையையிலேயே நிலைத்து இருக்கலாம்.

நான் யார் ?



உலகம் முழுவதும் வாழும் மக்களின் மனதில் எழக்கூடிய கேள்வி எது என்றால் நான் யார்? என்ற கேள்வியாகும். ஏன் இந்த கேள்வி மக்கள் மனதில் எழுகிறது என்றால், அவர்கள் தற்பொழுது வாழக்கூடிய வாழ்க்கையின் இன்பதுன்பங்களாலும், மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் தன் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்தும் இந்த கேள்வி எழுகிறது. இப்படி வாழ்க்கையின் இன்பதுன்பங்களை ஒப்பிட்டு பார்த்து நான் யார் என்ற கேள்வி எழுப்புவோர் ஒரு சாரார்.

சிலர் பக்தி, தியானம், யோகம், ஞானம் போன்ற விஷயங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கும் நான் என்பது ஆன்மா என்றும், இந்த உடல் நானில்லை என்றும் சமய நூல்களின் மூலமாகவும், பல சாமியார்கள் மூலமாகவும், கேட்டு அறிந்து இருக்கிறார்கள். அவர்களுக்கும் நான் யார் ? என்ற கேள்வி உதிக்கிறது.

இப்பொழுது நான் யார் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்!

மனித உடலில் மூன்று அணு இருக்கின்றது, இவற்றை சூரியன், சந்திரன், மூலம் என்று மூன்று அக்னியாக குறிப்பிடப்படுகிறது. இந்த மூன்று அக்னியின் சாரம் தான் மனித உடலை இயக்குகிறது. இந்த மூன்று அக்னிகளும், முக்குணங்களாகாவும், எட்டு அவஸ்தைகளாகவும், விருப்பு-வெறுப்பு, இன்ப- -துன்பம் போன்ற செயல்களுக்குள் ஆட்பட்டு இருக்கிறது. ஆகவே இவை மனித உடலில் தனித்தனியாக இயங்குகிறது. இதனால் தான் மனிதனின் மனம்

இந்த அவஸ்தைகளுக்கு ஆட்பட்டு, எல்லா செயல்களிலும் “நான்” என்ற அகங்காரத்திற்க்கும், மாயைக்கும், வினைகளுக்கும் ஆட்பட்டு, இறைத்தன்மையை அறியமுடியாமல் போகிறது. மேலும் தனக்கும், இறைவனுக்கும் சம்பந்தமில்லாமல், தானே தன் அறிவைக்கொண்டு செயல்படுவதாக நினைத்துக்கொண்டு நான், நான், நான் என்ற கர்வத்தில் ஆழ்ந்துவிடுகிறது.

ஆனால், இந்த மனிதன் இறைத்தன்மை எது? நான் யார்? என்பதை பகுத்தறிய முடியாமல் தவிக்கிறான். அப்படிப்பார்த்தால் மனிதன் நேர்மையும் – நியாயமும் இல்லாதத்தன்மையில் உணர்வுரீதியாக வாழ்ந்து, அவஸ்தைகளில் இருப்பது தான் “நான்” என்ற உணர்வை ஏற்படுத்துவதாகும். இப்பொழுது நான் என்ற உணர்வையும், இறைத் தன்மையையும் பிரித்து பார்ப்போம். இதற்கு ஒரே வழி ஞானயோகம் செய்வது தான்.

நான் என்ற உணர்வு நூறு சதவிகிதம் துன்பத்தை தருவதால் ஞானிகள் இதற்கு விடை கண்டார்கள். யோகம் செய்யும் போது சுவாசத்தை கட்டுப்படுத்தி, உயிர் ஆற்றலை பெருக்கி, மனதில் உள்ள அவஸ்தைகளை நீக்கி, முக்குணங்களையும் கடந்து, அதன் மூலம் மனத்தை ஒளிநிலையை அடையச்செய்து, அதன் மூலம் ஆன்ம ஒளியை பிரகாசிக்கச் செய்து, இன்ப-துன்பும், விருப்பு வெறுப்புகளை கடந்து ஒளியான மனதை ஆன்மா ஒளியில் லயிக்கச் செயயும் போது எற்படும் நிலைகளை இப்போது பார்ப்போம்.

மனம் அவஸ்தைக்ளை கடந்தபின், நமக்குள்ளே மூல அக்னி தன்மையும், சூரிய அக்னி, சந்திர அக்னி தன்மைகளும் பெருகி மூன்று அக்னியும் ஒன்று சேரும் நிலை ஏற்படும். அப்பொழுது ஆன்மா ஒளி பேராற்றலை பெற்று பல்கி பெருகும். அப்பொழுது மனம் அந்த ஆன்மா ஒளியில் சேர்ந்து நிற்கும். இது தான் சமாதி நிலை ஆகும். சமாதி நிலையை தொடர்ந்து ஒருவர் செய்துவரும்பொழுது பேராற்றலை கிரகித்துக் கொள்வார். அவர் சமாதி நிலையிலிருந்து விடுபட்டு, உலக மக்களுடன் பழகும் போது அவர்களால் ஏற்படும் இன்ப-துன்பங்களிலிருந்து அவர்களுடைய மனம் உணர்ச்சிவசப்படாமல், எந்த வித ஆணவமும், அகங்காரமும், கர்வமும் இல்லாத நிலையில் இருக்கும். அப்போது தான் அவர்கள் தனது மனத்திலும், செயலிலும், சிந்தனைகளிலும் வியக்கத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்வார்கள்.

அப்பொழுது அவர்கள் மனதில் ஏற்படும் எண்ணங்கள், செய்யக்கூடிய செயல்கள் இறைவனுடைய உணர்வே என்பதை உணர்கிறார்கள். இந்த நிலையில் தான் "நான்' என்ற எண்ணம் அழிக்கப்படுகிறது. இது எப்படி என்றால், பேராற்றல்தான் அந்த இறைத்தன்மை மிக்க ஒளி அன்பு, கருணை, எளிமை, பொறுமை, அமைதி, அடக்கம், சாந்தம், தூய்மை போன்ற எண்குணத்தால் நிரம்பியிருப்பதால், சமாதி நிலையில் அதனை கிரகிக்கும். அவனுக்குள்ளும் அந்த உணர்வுகளின் பதிவுகளை கொடுக்கிறது. ஆகவே அதைபெற்று, அந்த நிலையில் அவன் வாழும்போது, இதெல்லாம் அங்கிருந்து பெறப்பட்ட உணர்வு என்பதை உணர்ந்து அந்த நிலையிலே வாழ்வதால் “நான்” என்ற உணர்வு அழிகிறது. அப்போது அவர்களுடைய சொல்லும், செயலும் யாருக்கும் தீங்கு விளைவிக்காது. அப்போது தான் நான், நான் என்று சொன்னவர்கள் “எல்லாம் அவன் செயல்” என்று கூறுகின்றனர்.

ஆகவே, மூன்று அக்னியும் நமது உடலில் தனித் தனியாக இயங்கி கொண்டிருக்கும் வரை “நான்" என்ற நிலை மனிதனுக்குள் ஏற்படும். மூன்று அக்னியும் ஒன்றாகிவிட்டால், சமாதி நிலை ஏற்பட்டு, பேராற்றலை பெறும்பொழுது தான் நான் என்ற நிலை ஒழியும். அப்போது தான் நாம் இறைத்தன்மையை அடைகிறோம், இறைசெயலால் வாழ்கிறோம், அதனால் எல்லா உயிர்களையும் தன் உயிர்போல நினைக்கிறோம். அதனால் அங்கு நான் என்பது அழிந்துவிடுகிறது என்பதை அறிகிறோம்.

ஆகவே உலக மக்களே! எட்டு அவஸ்தைகளின் மொத்த உருவம் தான் நான அதனை நீக்கினால் இறைத்தன்மையை அடையலாம். இதுதான் உண்மையான நான் ஆகும்

Saturday, July 21, 2012

சரணாகதி



              ஒரு கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து பார்த்தால் தண்ணீர் இடைவெளி இல்லாமல் இருக்கும். ஒரு தண்ணீரால் செய்யப்பட்ட பனிக்கட்டியை தண்ணீரில் போட்டால் அதன் எடைக்கு ஏற்ப தண்ணீரில் முழ்கி இருக்கும்.  இப்போது தண்ணீருக்கும் பனிக்கட்டிகும் இடைவெளி இருக்கும். தண்ணீரில் செய்த ஒரு பொருளாக இருந்தாலும் பனிக்கட்டி ஒரு உருவத்தில் இருக்கும் வரை தண்ணீரில் இருந்து பிரிந்தே இருக்கும். பாத்திரத்தை அசைத்தால் பனிக்கட்டி தனியாக ஆடும் தண்ணீர் தனியாக ஆடும்.  ஆனால் பனிக்கட்டி உருகி தண்ணீராய் மாறிய பிறகு அங்கே பனிக்கட்டி தண்ணீர் என்ற இடைவெளி பாகுபாடு மறைந்துவிடும். இப்போது பாத்திரம் ஆடினால் தண்ணீர் முழுவதும் ஒன்றாய் ஆடும். இப்போது பனிக்கட்டி உருகிவிட்டதால் அதன் உருவத்தை இழந்துவிட்டதால் பாத்திரத்தில் தண்ணீர் எப்படி ஆடுகிறதோ அதே திசையில் ஆடும்.

        
அதுபோல் இயற்கையால் செய்யப்பட்ட பொருள்கள் எல்லாம் உருவம் இருக்கும் வரை தனி தனியே தான் ஆடி கொண்டிருக்கும். உருவம் அற்ற சூழ்நிலையில் எல்லாம் இயற்கை அசைவது போல் மட்டுமே ஆசையும் அந்த அசைவு ஒரே திசையிலேயே அமையும். உருவம் இருக்கும் வரை அசைவு மாறும்.  உருவத்தை கொடுப்பது நான் என்கின்ற எண்ணமே. நான் என்கின்ற எண்ணம் வந்துவிட்டால் நீ என்ற எண்ணம் வந்துவிடும். நீ என்ற எண்ணம் வந்துவிட்டால் பலவாக உருவங்கள் பிரிந்து இந்த உலகத்தை காட்டிக்கொண்டே இருக்கும்.
நான் என்ற உருவம் மறையவேண்டுமானால் நான் என்ற எண்ணம் மறைய வேண்டும். நான் என்ற எண்ணம் மறைந்து விட்டால் நீ என்ற எண்ணம் மறைந்து விடும் அப்போது உலகம் மறைந்து விடும். உலகத்தை மறந்தால் நான் என்பதும் மறைந்துவிடும். உலகத்தில் உள்ள பொருட்களின் உருவத்தை மறந்து எல்லாவற்றையும் இயற்கையாக பார்க்க வேண்டுமானால் இந்த உலகத்தின் மேல் உள்ள ஆசை போகவேண்டும் அது இல்லாவிட்டால் இறைவனை அடையமுடியாது.

        
உலக பற்று நீங்காதவரை இறைவனை அடையமுடியாது. உலக பற்று எப்படி நீங்கும்.  அந்த பற்றை கொடுத்தவனால் மட்டுமே நீக்கமுடியும். அந்த பற்றை கொடுக்கும் மாயை என்ற இறைவனை தொழுது நிற்க வேண்டும். அவனே நான் என்ற எண்ணத்தை கொடுக்கின்றான். அவனே நான் என்ற எண்ணத்துக்குள் இருக்கின்றான். நான் என்ற எனக்குள் இருக்கும் இறைவனை, குருவை, மாயையை வணங்கி வழிபட்டால் அவனே வந்து ஆட்கொண்டு வழி நடத்துவான். அவன் வழிநடத்துதலின் பேரில் நாம் நடந்தால் அவனே நம்மை அவனுக்குள் ஐக்கியமாகி கொள்வான்.

      
எப்படி ஒரு பாறை என்ற உருவப்பொருள்   . ஒரே மூல பொருளால் செய்யபட்டதோ , அதுபோல் இயற்கையில் உள்ள பொருள்கள் எல்லாம் ஒரே பொருளால் செய்யப்பட்டதாகும்.  பாறைக்குள் எப்படி எந்த அசைவும் இருக்காதோ அதேபோல் இயற்கைக்குள் எந்த அசைவும் இல்லை என்பது தான் உண்மை.
அப்படியென்றால் உலகம் தெரிகிறதே அசைவுகள் தெரிகிறதே என்றால் அது அப்படியாக தெரிவது மாயையே. இந்த உண்மை தெரிவிக்க இறைவன் வந்து காட்டினால் தான் புரியும். அதுவரை புரியாது.

     
சுவாசம் என்ற உணர்வு தான் நம்மையும் இந்த உலகத்தையும் வேறுபடுத்தி காட்டுகிறது . சுவாசம் என்பதே மாயையாகும்.  உண்மை தெரியும் போது சுவாசம் நின்றுவிடும்.  சுவாசம் நின்றால் எல்லோரும் இறந்துவிடுவோம் என்பது உலகத்தின் உண்மையாகும்.  ஆனால் சுவாசம் நின்றால் தான் நான் என்ற எண்ணம் மறைந்து இறைநிலையோடு ஒன்றும் நிலை ஏற்படும் என்பது ஆன்மீக உண்மையாகும் .  போக்கும் வரவும் உள்ள சுவாசத்தை கட்டுதல் இறைநிலையே செய்துதரும்.  வெளிசுவாசம் உள்சுவாசமாக மாறும் பின்பு அதுவும் முழுமையாக நின்றுவிடும்.  இவைஎல்லாம் குருவருள் கிடைத்தால் தான் நிறைவேறும் அதனால் நம்மில் இருக்கும் குருவை முழுமையாக நம்பி நம்முடைய பிறவியை சமர்ப்பித்து சரண் அடையவேண்டும்.  சரணடந்தவருகே சித்தி கிடைக்கும். இது சத்யம்.