பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Saturday, February 9, 2013

திருமூலரின் மூச்சுப்பயிற்சி



திருமுலர்: 

சைவத்தை பரப்பிய 63 நாயன்மார்களில் குறிப்பிடத்தக்கவர், இந்த திருமூல நாயனார். இவர் ஏறத்தாழ 2800 ஆண்டுகளுக்குமுன் வட இந்தியாவில் இருந்து தமிழகத்தில் உள்ள சித்தூருக்கு வந்தவர். இவர் சிவபெருமானின் விருப்பத்திற்க்கேற்ப, சைவ ஆகம விதிகளை தமிழில் எழுதினார், அதுவே திருமந்திரம் ஆகும். இனி நாம் திருமந்திரத்தில் திருமூலர் கூறும் மூச்சுப்பயிற்சியை காண்போம்.

பிணி, திரை, மூப்பு இல்லாத் வாழ்க்கை வேண்டும் என்பதே மனிதனின் ஆசை. இதற்கான வழிமுறைகளை திருமந்திரத்தில் அருளியுள்ளார்.


உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன் 
உடம்பினுக்கு உள்ளே உறுப்பொருள் கண்டேன் 
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான்என்று 
உடம்பினை யான்இருந்து ஒம்புக்கின்றேனே.
 (திருமந்திரம் 725 ) 

உடலை முன்பு இழுக்கு என்றிருந்தேன், உடம்புக்குள்ளே உயிரான உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினை யோகத்தால் வளர்த்து உயிரை வளர்க்கின்றேன் என்று திருமூலர் கூறுகிறார்.

திருமூலர் கூறியதில் அட்டாங்கயோகத்தில் பிராணாயாமம் அதாவது மூச்சுப்பயிற்சியைப் பார்ப்போம்.

பிராணாயாமம் என்றால் என்ன?

பிராணாயாமம் என்றால், பிராணனை பற்றிய அறிவு மற்றும் அதை நமது விருப்பப்படி அடக்குதல் என்று பொருள்.

பிராணாயாமம் செய்வதால் என்ன பயன்?

நாம் வாழும் இந்த மனித உலகம், மற்றும் அண்ட வெளியெங்கும், பிராணன்  எனும்  எல்லையற்ற சக்தியால் நிரம்பியுள்ளது.

அந்த பிராணன் தான், நம்மை, நமது உடம்பை, நமது உயிரை இயக்குகிறது. உயிருக்கு ஆதாரமாக இருப்பது மூச்சுதான். எனவேதான் அதை உயிர்மூச்சு என்கிறோம்.

ஆக, நாம், நமது மூச்சை (இடது நாசி, வலது நாசி) இறைவன் அருளோடு, கட்டுப்படுத்தி அடக்குவதன் மூலம், பிராணனை வசப்படுத்த முடியும்.


ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகுஅறி வார்இல்லை 
கூறிய நாதன் குருவின் அருள்பெற்றால் 
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.
(திருமந்திரம் 565 ) 

பறவையைவிட, வேகமாகச் செல்லக்கூடிய இந்த பிராணனாகிய குதிரையை நம் வசப்படுத்திக் கொண்டால், கள் உண்ணாமலேயே கள் உண்ட ஆனந்த நிலையை உணரமுடியும், சுறுசுறுப்பும், துள்ளலும் தானே ஏற்படும்.



புள்ளிரும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்உண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடையார்க்கே.
(திருமந்திரம் 566 )

புள் எனும் ஒரு வகை பறவை, குஞ்சுபோரித்தவுடனேயே, வேகமாக பறக்கும் தன்மையுடையது, அதுபோலதான் நமது மூச்சும்.


பிராணாயாமம் செய்யும் வழிமுறை என்ன?


ஆசனம்


நீண்ட நேரம் அமர்ந்து பிராணாயாமம் செய்ய சிறந்த இருக்கை முறை (ஆசனம்) மிகவும் முக்கியம். ஆசனம் மொத்தம் 126 நிலைகள் உள்ளன. அவற்றில் 8 சுகாசனம் எனப்பெயர்படும். அவை பத்மம், பத்திரம், கோமுகம், கேசரி, சௌத்திரம், வீரம், சுகாதனம், சுவத்திகம் என்பவை.


பிராணாயாமம் 


ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல்  கும்பகம் அறுபத்து நாலதில்
உறுத்தல் முப்பத் திறந்ததில் ரேசகம் 
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே 
(திருமந்திரம் 568 )

 16 மாத்திரைகள் அளவு இடது நாசி வழியாக மூச்சை 
உள்ளிழுத்து, 64 மாத்திரைகள் அளவு உள்ளடக்கி, 32 
மாத்திரைகள்  அளவு வலது நாசி வழியாக வெளிவிட 
வேண்டும். 

ஏறுதல் பூரகம் - உள்ளிழுத்தல் - எரெட்டு = 16 மாத்திரைகள்
ஆறுதல் கும்பகம் - அடக்குதல் -64 மாத்திரைகள் 
ஊறுதல்  இரேசகம் - வெளிவிடுதல் - 32  மாத்திரைகள் 
மாறுதல் - இடது நாசி, வலது நாசி என மாறுதல்.


பிறகு வலது நாசி வழியாக மூச்சை 
உள்ளிழுத்து, இடது நாசி வழியாக 
வெளிவிட வேண்டும்.

ஆரம்பத்தில் இந்த 16:64:32 என்ற கணக்கில் பயிற்சி 
செய்வது இயலாத காரியமாகலாம். எனவே, 4:16:8  
என்ற கால அளவில் துவங்கி, படிப்படியாக நேரத்தை 
அதிகரிக்கலாம்.

No comments: